அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
கொரொனோ ஊரடங்கினால் பொதுமக்களின், தொழிலாளர்களின் தீர்க்க முடியாத பிரச்சனைகளை மனுவாக பெற்று அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு திமுகவினர் அளித்து வந்தனர். அதில் செந்தில்பாலாஜி கரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்து விட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது இது குறித்து கரூா் மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரில் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான வி. செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார் .
இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, சட்டமன்ற உறுப்பினர் நிதியை பயன்படுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாகவும், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினர், ஒருமுறை அமைச்சர் இரண்டு லட்சம் மக்களின் பிரதிநிதி என்ற முறையிலேயே மாவட்ட ஆட்சியரை சந்தித்ததாகவும் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிட்டப்பட்டது. மேலும், எந்த ஒரு மிரட்டல் விடுக்கவில்லை என்றும், பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியதை வைத்து, நான்கு நாட்கள் கழித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஒரு திட்டமிடப்பட்ட வழக்கு என்றும் வாதிடப்பட்டது.
கலெக்டர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை.. ஊரடங்கு நீட்டிப்பு பற்றி நாளை முக்கிய முடிவு?
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுமதிக்கப்பட்ட நபர்களை விட கூடுதலாக வந்ததாகவும், கலெக்டர் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகவும் அதன் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி நிர்மல்குமார் இது போல் நடந்துகொள்ள மாட்டேன் என கரூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் உத்தரவாத மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் 2 வாரங்களுக்கு கரூர் மாவட்ட சிபிசிஐடி அலுவலத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்கு ஒரு லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீனை திமுக சட்டமன்ற உறுப்பினரான செந்தில்பாலாஜிக்கு வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.