இந்திய கிரிக்கெட் அணிக்கு காவி சீருடை- அரசியலை புகுத்தாதீர்... சொல்வது திமுக எம்.எல்.ஏ. அன்பழகன்
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் நீல நிற சீருடை மாற்றப்பட்டு காவி உடை வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது. ஆனால் விளையாட்டில் அரசியலை புகுத்த வேண்டாம் என திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கூறியுள்ளார்.
மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்த உடன் அனைத்தையும் காவி மயமாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மதுரை மேம்பாலத்துக்கு காவி வண்ணம் பூசப்பட்டதற்கு திமுக எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன் கடுமையாக எதிர்த்தார்.
விழுப்புரத்தில் அரசு பள்ளியில் பாஜகவின் கட்சி கொடியில் மாணவர்களுக்கான இருக்கைகள் அமைக்கப்பட்டன. இதற்கும் கடும் எதிர்ப்பு எழ அரசு தரப்பு பின்வாங்கியது.
தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் நீல நிற சீருடை மாற்றப்பட்டு காவி உடை வழங்கப்பட்டுள்ளது. இது நாடு தழுவிய அளவில் பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது.
அதேநேரத்தில் திமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், கிரிக்கெட்டில் அரசியலை புகுத்த வேண்டாம். இந்திய அணியின் புதிய சீருடையில் நான் அரசியலை பார்க்க விரும்பவில்லை என கூறியிருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.