மார்ச் 9ம் தேதி.. காலை 11 மணிக்கு அறிவாலயம் வர வேண்டும்.. திமுக எம்எல்ஏக்களுக்கு உத்தரவு
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கொறடா சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகள் குறித்து அப்போது ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
மார்ச் 9ம் தேதி முதல் 23 நாள்களுக்கு தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,
சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் அன்றைய தினம் எம்எல்ஏக்கள் கூட்டம் அழைக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் என்பதை பற்றி விரிவாக ஆலோசிக்கவே இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது ரஜினிகாந்த் நடத்திய மக்கள் மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனை குறித்தும் விவாதிக்க வாய்ப்புள்ளது.