மறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி
Recommended Video
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தொடர்பாக முரசொலி நாளிதழில் ''மறந்து போச்சா மருத்துவரே'' என்ற தலைப்பில் கடந்த 9 நாட்களாக விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இது திமுக-பாமக இடையேயான மோதலின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் உள்ளது. வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு, மறைந்த வன்னிய சமுதாய தலைவரான ஏ.கோவிந்தராஜுவுக்கு மணிமண்டபம் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை மு.க.ஸ்டாலின் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளியிட்டார். அப்போது தொடங்கிய திமுக-பாமக இடையேயான அறிக்கை யுத்தம் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
தொடர்ந்து மாறி மாறி இரு கட்சிகளுக்கும் பரஸ்பரக் குற்றச்சாட்டுக்களை நாள்தோறும் தெரிவித்து வருகின்றன. மேலும், விக்ரவாண்டி தொகுதியில் பிரச்சாரம் செய்த பாமக நிறுவனர் ராமதாசும், அவரதும் மகன் அன்புமணியும் ஸ்டாலினை கடுமையாக தாக்கி பேசினர். இதற்கு பதிலடி தரும் வகையில் முரசொலி நாளிதழில் ராமதாஸ் கடந்தகாலங்களில் அளித்த வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி தினமும் செய்தி வெளியிடப்படுகின்றன.
அதிமுகவுக்கு எதிராகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தும் கடந்த காலத்தில் ராமதாஸ் பேசியதை மேற்கோள் காட்டி மறந்துவிட்டதா மருத்துவரே என்ற தலைப்பில் முரசொலி நாளிதழ் தொடராக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று, இட ஒதுக்கீடு போராட்டத்தில் கலந்துகொண்டு துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 10 மாடுகள் வாங்கித்தருவதாக கூறினீறே, அது என்னவாயிற்று என ராமதாசுக்கு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும், இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் நினைவாக மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்து இருந்தீர்களே, அந்த அறிவிப்பு என்னவானது என வினவப்பட்டுள்ளது. இதனிடையே திமுக-பாமக இடையேயான மோதலை சத்தமின்றி ரசித்து வருகிறது அதிமுக.