''சமூக பிரச்சினைக்கு குரல் கொடுத்தவர் விவேக்''.. கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!
சென்னை: நடிகர் விவேக்கின் மறைவுக்கு தி.மு.க எம்.பி கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஒரு பக்கம் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு.. மறுபுறம் தலைவிரித்தாடும் கொரோனா.. தத்தளிக்கும் தமிழக மக்கள்
'சின்ன கலைவாணர்' என்று அன்புடன் அழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் உயிரிழந்தார்.
மனங்களை வென்ற விவேக்
வெறும் நடிகராக மட்டுமின்றி சமூக சேவை செய்தும், ஏழை, எளிய மக்களுக்கும் உதவி புரிந்து மக்கள் மனங்களை வென்ற விவேக் மறைவுக்கு அரசியல், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விவேக் மறைவுக்கு உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
|
கனிமொழி இரங்கல்
கனிமொழி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ' நடிகர் பத்மஸ்ரீ. விவேக் அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. அவர் பல சமூகப் பிரச்சினைகளைக் குறித்து தனது திரைப்படங்கள் மூலமும், பிற தளங்களிலும் தொடர்ந்து பேசியவர். சமூகத்தின் பல நிலைகளிலும், நிலவி வரும் பாசாங்குகளைக் கண்டித்தவர். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
|
தாங்க முடியாத பேரதிர்ச்சி
உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ' அண்ணன் விவேக் அவர்களின் மரணம் தாங்கிக்கொள்ள முடியாத பேரதிர்ச்சி. கலைஞரின் அன்பை பெற்றவர். தலைவர் அவர்களின் நண்பர்.
'மனிதன்' படத்தில் என்னுடன் நடித்தார்-வழிநடத்தினார். திரையிலும் நிஜத்திலும் சமூகம்-சூழலியலுக்காக தொடர்ந்து குரல்கொடுத்தவர். அண்ணனின் மரணம் தமிழகத்துக்கு பேரிழப்பு.
பணிகள் தொடருவோம்
தன் வாழ்நாள் முழுவதும் நேர்மறை எண்ணங்களையும், உற்சாகத்தையும் விதைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அண்ணனின் இழப்பை குடும்பத்தார் எப்படி தாங்கிக்கொள்வர்? ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பம்-நண்பர்கள்- ரசிகர்களுக்கு என் ஆறுதல். சின்னக்கலைவாணர் விட்டு சென்ற சமூக பணிகளை நாம் தொடருவோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.