கனிமொழி போகும் அதே ரூட்டில்.. உதயநிதியும் போகிறாரே.. ஏன்.. செம பிளான்.. கலக்கும் திமுக..!
கனிமொழி செல்லும் ரூட்டில் எல்லாம் உதயநிதியும் செல்கிறாராம்
சென்னை: போகிற போக்கை பார்த்தால், திமுக எம்பி கனிமொழிக்கும், இளைஞர் அணி செயலாளர் உதயநிதிக்கும்தான் போட்டி ஏற்பட்டுவிடும்போல தெரிகிறது.. போகிற இடமெல்லாம், கனிமொழியின் முக்கியத்தை உதயநிதி குறைப்பது போலவே, கனிமொழியின் ஆதரவாளர்களுக்கு மனதில் பட்டுள்ளது.. இது சற்று வருத்தத்தையும் தந்து வருகிறதாம்.
கருணாநிதி இறந்தபிறகு தனக்கு கட்சியில் முக்கிய இடம் கிடைக்கும் என்று ஆரம்பம் முதலே எதிர்பார்த்தவர் கனிமொழி.. அதாவது, கடந்த எம்பி தேர்தல் முடிந்ததும், நாடாளுமன்ற திமுக குழு தலைவர் பதவி யாருக்கு? என்பதில் திமுகவுக்குள் பலத்த போட்டி இருந்தது.
இந்த பதவியை பிடிக்க டிஆர் பாலு - கனிமொழி இடையேதான் அதிகமான ரேஸ் இருந்தது.. அந்த பொறுப்பு தனக்கு தரப்படும் என்று பெரிதும் நம்பிய நிலையில், டிஆர் பாலுவுக்கு அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டது..
கனிமொழி
அதுபோலவே, சற்குணபாண்டியன் மறைவுக்கு பிறகு துணைப் பொதுச்செயலாளராக தனக்கு அந்த பொறுப்பு வரும் என்று எதிர்பார்த்தார்.. ஆனால், சுப்புலெட்சுமி ஜெகதீசனுக்கு தரப்பட்டுவிட்டது. இப்படி முன்பிருந்து தொடங்கிய அதே கசப்புணர்வும், அப்செட்டும் தற்போதும் கனிமொழிக்கு இருந்து வந்ததாக செய்திகள் கசிந்தபடியே வந்தன.
டிஆர் பாலு
சமீபத்தில்கூட, துணைப் பொதுச்செயலாளர் பதவிகிடைத்துவிடும் என்று நினைத்திருந்தார்.. அதுவும் இல்லாமல் போய்விட்டது. இத்தனைக்கும் கட்சிக்குள்ளேயே மிக முக்கிய விவகாரம் என்றால் டிஆர் பாலுவை போலவே, அதை சாமர்த்தியமாக முடிக்கும் திறன் உள்ளவர் கனிமொழி என்றாலும், அவருக்கான பதவி இன்னும் கிடைக்காமலேயே உள்ளது.
அமித்ஷா
இந்நிலையில்தான், உதயநிதியின் அதிரடி துவங்கி உள்ளது.. குறிப்பாக அமித்ஷா வந்துபோனதில் இருந்து, எல்.முருகனுக்கு இணையாக உதயநிதியும் மக்களை சந்தித்து வருகிறார்கள்.. இறுதியில் முருகனும், உதயநிதியும் ஆளுக்கொரு பக்கம் கைதாகியும் வருகிறார்கள்.. இப்படி உதயநிதியின் விஸ்வரூப வளர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், அது கனிமொழி ரூட்டில் கிராஸ் ஆகும்போதுதான், அதிருப்திகள் எழுகின்றன.
தூத்துக்குடி
குறிப்பாக, பென்னிக்ஸ் உயிரிழந்தபோது, கனிமொழியின் செயல்பாடுகள் திமுகவின் மத்தியில் பெரும் மதிப்பையும் பெற்றிருந்தன. கொரோனாவை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், கனிமொழி தூத்துக்குடிக்கே சென்றுவிட்டாரே என்று ஆச்சரியப்பட வைத்தார்.
சாத்தான்குளம்
அந்த சமயத்தில், அது கனிமொழியின் தொகுதி என்ற தெரிந்தும், திடீரென சாத்தான்குளத்துக்கு உதயநிதி கிளம்பி சென்று பாதிக்கப்பட்டோர் குடும்பத்தை பார்த்து ஆறுதல் சொன்னார்.. இவர் எதற்கு அங்கே கிளம்பி செல்ல வேண்டும்? அதான் கனிமொழி இருக்கிறாரே என்று திமுகவினர் முணுமுணுத்தனர்.. கனிமொழியை கடுப்பேற்றும் செயல் என்றும் கிசுகிசுத்தனர். ஆனால், சாத்தான் குளத்துக்கு ஸ்டாலினே நேரடியாகச் செல்ல நினைத்தார். ஆனால், தொற்று அதிகமாக இருப்பதால் அவர் செல்ல வேண்டாம் என்று குடும்பத்தினர் தடுத்துவிட்டதால், உதயநிதியை அனுப்பி ஆறுதல் சொல்ல சொல்லியிருக்கிறார். இதில் தவறில்லை" என்றும் மற்றொரு பக்கம் சொல்லப்பட்டது.