9 நாட்கள் பயணமாக செர்பியா சென்ற கனிமொழி எம்.பி...!
சென்னை: சர்வதேச நாடாளுமன்ற யூனியன் கூட்டத்தில் கலந்துகொள்வதாக திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி செர்பியா நாட்டுக்குச் சென்றுள்ளார்.
மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள சின்னஞ்சிறிய நாடு செர்பியா. செர்பிய மொழி ஆட்சி மொழியாகவும், அல்பேனிய, ஹங்கேரிய உள்ளிட்ட மொழிகள் பிராந்திய மொழிகளாகவும் அங்கு உள்ளன. இந்நிலையில் இன்று தொடங்கி வரும் 18-ம் தேதி வரை சர்வதேச அளவிலான நாடாளுமன்ற யூனியன் கூட்டம் செர்பியாவில் நடைபெறுகிறது.
அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக உலகின் பல நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் செல்கின்றனர். அந்தவகையில் இந்தியாவிலிருந்து 6 பேர் கொண்ட எம்.பி.க்கள் குழு செர்பியா புறப்பட்டுச் சென்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, சசிதரூர், வன்சுக் சியெம், திருபாய் ஷ்யால், ராம்குமார் வர்மா, சாஸ்மித் பத்ரா ஆகியோர் இந்திய அரசின் பிரதிநிதிகளாக கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.
6 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு சபாநாயகர் ஓம் பிர்லாவும் செர்பியா செல்கிறார். 141-வது நாடாளுமன்ற தூது குழுவின் ஒரு அங்கமாக இந்த பயணம் இருக்கும் எனத் தெரிகிறது. மக்களவை சபாநாயகர் கடந்த வாரம் தான் உகாண்டாவில் நடைபெற்ற சர்வதேச பேரவை தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு விட்டு இந்தியா திரும்பினார். இந்நிலையில் மீண்டும் அவர் செர்பியா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இடைத்தேர்தலில் கனிமொழி பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை தவிர்த்து வெளிநாடு புறப்பட்டுச் சென்றுள்ளார். விக்ரவாண்டியில் மட்டும் 2 நாட்கள் பரப்புரை செய்தார். நாங்குநேரியில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.