சொன்னதை செய்த கனிமொழி... வேண்டாம் CAA-NRC என வீட்டில் கோலமிட்டு எதிர்ப்பு
சென்னை: குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து திமுக மகளிரணிச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தனது வீட்டில் ''வேண்டாம் CAA-NRC'' எனக் கோலமிட்டு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள அவரது வீட்டில் கோலமிடும் போராட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் கனிமொழி.
இதையடுத்து தமிழகம் முழுவதும் திமுக மகளிரணியினர் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தங்கள் வீடுகளில் ''வேண்டாம் CAA-NRC'' என்ற வாசகத்துடன் கூடிய கோலமிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
கோலம் போட்டதால் கைதில்லை.. கோலம் சொன்ன கருத்து அலங்கோலமாக இருந்ததால் கைது.. மாஃபா விளக்கம்
கைது
குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கோலமிட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்த 6 பெண்களை போலீஸ் நேற்று கைது செய்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, கோலமிட கூட உரிமையில்லையா என மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கேள்வியும் எழுந்தது.
தலைவர்கள்
இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போன்றோர் காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அவர்களை விடுவிக்க வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
விளம்பரம்
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் 6 பெண்கள் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோலமிடுவதே பல ஊடகங்களுக்கு தெரியாத நிலையில், அவர்களை போலீஸ் கைது செய்ததன் மூலம் கோலமிட்டும் எதிர்ப்பை பதிவு செய்யலாம் என்ற விஷயம் விளம்பரமானது.
சமூக செயல்பாட்டாளர்கள்
இதையடுத்து சமூக செயல்பாட்டாளர்கள் பலர் தங்கள் வீடுகளுக்கு முன்பு குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோலம் போட்டு அதை ட்விட்டர், இன்ஸ்டா, முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டனர். இதனால் கோலம் மூலம் எதிர்ப்பு தெரிவிக்கும் விவகாரம் கடல் கடந்தும் நொடிபொழுதில் பரவியது.
திமுக மகளிரணி
இந்நிலையில், குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து திமுக மகளிரணியினர் வீடுகளில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தை நடத்துவோம் என அந்த அணியின் செயலாளர் கனிமொழி நேற்று அறிவித்திருந்தார். அதை செயல்படுத்தும் வகையில் இன்று முதல் ஆளாக தனது வீட்டு வாயிலில் ''வேண்டாம் CAA-NRC'' எனக்கோலமிட்டுள்ளார்.