பிரச்சாரத்திற்கு கனிமொழி தலைகாட்டாத காரணம் ... அண்ணன் மீது மனவருத்தம்?
சென்னை: மக்களவை உறுப்பினரும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி தனது அண்ணன் மு.க.ஸ்டாலின் மீது மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
விக்ரவாண்டியில் மட்டும் 2 நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி. நாங்குநேரி பக்கம் தலைகாட்டவில்லை. சர்வதேச நாடாளுமன்ற யூனியன் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக செர்பியாவுக்கு சென்றுவிட்ட அவர் சனிக்கிழமை அன்று தான் சென்னை திரும்பினார். அந்தக் கூட்டத்தில் கனிமொழி தான் கலந்துகொள்ள வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் இல்லை.
திமுக தரப்பில் வேறு யாராவாது ஒருவரை கூட தலைமை அனுப்பி வைத்திருக்கலாம். குறிப்பாக உலக நடப்புகளை அறிந்தவரும், படித்தவருமான தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமாரை கூட செர்பியாவுக்கு அனுப்பிவைத்து விட்டு கனிமொழி நினைத்திருந்தால் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கலாம்.
9 நாட்கள் பயணமாக செர்பியா சென்ற கனிமொழி எம்.பி...!
ஆனால் அவர் அதை செய்யவில்லை, அண்ணன் ஸ்டாலின் மீதுள்ள மன வருத்தம் காரணமாக பிரச்சாரத்தை புறக்கணித்து செர்பியா பறந்தாராம். கடந்த சில மாதங்களாக கட்சியில் தமக்கு முக்கியத்துவம் குறைக்கப்படுவதாக கருதுகிறாராம் கனிமொழி. இது குறித்து அண்ணனிடம் வாய்விட்டு கேட்கவும் முடியாமல், சொல்லவும் முடியாமல் தவிக்கிறாராம் அவர்.
இதனிடையே இடைத்தேர்தல் பிரச்சாரம் எல்லாம் ஓய்ந்த பின்னர் நேற்று தனகு தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டிக்கு சென்ற கனிமொழி, அங்கு அவரது தீவிர ஆதரவாளர் வழக்கறிஞர் மகிழன் ஏற்பாடு செய்திருந்த வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்ததுடன், வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி ஆணையையும் வழங்கினார்.