ஏழைகளுக்கு உயர் கல்வியை எட்டாக்கனியாக்கும் புதிய கல்வி கொள்கை- கனிமொழி
சென்னை: ஏழைகளுக்கு உயர் கல்வியை எட்டாக் கனியாக்கும் புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று திமுக லோக்சபா எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அமைச்சரவை கூட்டமானது புதிய கல்வி கொள்கைக்கு நேற்று ஒப்புதல் வழங்கியது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து ஏற்கனவே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மத்திய அமைச்சரவை ஒப்புதலையடுத்து புதிய கல்வி கொள்கை அமலுக்கு வர உள்ளது. தற்போது நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கை குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே புதிய கல்வி கொள்கை குறித்து திமுக லோக்சபா எம்.பி கனிமொழி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
34 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றம் கொண்டுவரப் பட்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கையில் ஆக்கப்பூர்வமான எதுவும் இல்லை. குறிப்பாக, அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு, மும்மொழிக் கொள்கை, சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் போன்றவை கல்வித்தரத்தை மேம்படுத்தும் அறிவிப்புகளா?
பள்ளிகளில் இனி மும்மொழி திட்டம். புதிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சங்கள் என்ன? மத்திய அரசு விளக்கம்
புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம் ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர் கல்வியை எட்டாக்கனியாக்கும் முயற்சி நடக்கிறது. மாநில உரிமைகள் பறிப்பு, இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு ஆகியவற்றை திட்டமிட்டு செய்து வருகிறது மத்திய பாஜக அரசு. இதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும். இவ்வாறு கனிமொழி கூறியுள்ளார்.