டக்குனு எழுந்து வந்து கட்டிபிடித்த கனிமொழி.. திக்குமுக்காடிய அருந்ததி இன பெண்.. ஊரெல்லாம் இதே பேச்சு
கனிமொழியின் தருமபுரி பிரச்சாரம் பெரும் பாராட்டை பெற்று வருகிறது
சென்னை: திமுக எம்பி கனிமொழி இப்படி செய்வார் என்று அந்த பெண் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை.. திடீரென்று கட்டிப்பிடிக்கவும் திக்குமுக்காடி போய்விட்டார் அந்த அருந்ததியின பெண்.. தர்மபுரி முழுக்க இதே பேச்சாகத்தான் இருக்கிறது.. கனிமொழியின் அரவணைப்பு இப்படி பேசவைத்தும் வருகிறது..!
Recommended Video
"விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" என்ற தேர்தல் பிரச்சாரம் தமிழகம் முழுக்க நடந்து வருகிறது... இதில் திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழியும் கலந்துகொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில், தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
கனிமொழியை பார்த்ததுமே மக்கள் திரண்டு வந்து பிரச்சனைகளை லிஸ்ட் போட்டு சொல்ல ஆரம்பித்துவிட்டனர்..
மேம்பாலம்
குறிப்பாக, உட்பட்ட ஏரியூர் அடுத்த நாகமரை பகுதியில் காவிரி ஆற்றை கடந்து செல்ல சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு, காவிரி ஆற்றின் மீது ஒரு மேம்பாலம் கட்டித் தரவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் ரொம்ப நேரமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், ஆளும் தரப்பில் அப்படி ஒரு கோரிக்கையை யாரும் நிறைவேற்றதால், கனிமொழியிடம் இதே கோரிக்கையை அப்பகுதி மக்கள் தந்தனர்..
நாகமரை
இதையடுத்து, கனிமொழியும் நாகமரை பகுதிக்கு சென்றார்... அங்கு ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை வைக்கும் பகுதியை, காவிரி ஆற்றில் படகில் பயணித்தபடியே அவர் பார்வையிட்டார்.. இதை பார்த்ததுமே அந்த மக்களுக்கு ஒரு நம்பிக்கையை துளிர்க்க தொடங்கி உள்ளது. அதுமட்டுமல்ல, வணிகர்களுடன் சந்திப்பு, கொடியேற்றுவதல், விவசாயிகளுடன் சந்திப்பு, பொதுமக்களுடன் சந்திப்பு என தர்மபுரியில் றெக்கை கட்டி பறந்த கனிமொழியை கண்டு மக்கள் வியந்து போயினர்..
என் அண்ணன்
அதுமட்டுமல்ல, அந்த தொகுதியில் கனிமொழி எங்கு பேசினாலும் சரி, "என் அண்ணன் சொன்னதை முதல்வர் நிறைவேற்றுகிறார் " என்ற விஷயத்தை மறக்காமல் பதிவு செய்துவிடுகிறார்.. திமுக ஆட்சி அமைந்தவுடன் பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்கப்படும் என்பதுடன், மாநில அரசின் வரியை குறைப்பது தொடர்பாக ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஸ்டாலின் முடிவு செய்வார் என்ற உத்தரவாதத்தையும் வலுவாக தருகிறார்..
ஒகேனக்கல்
தர்மபுரி மாவட்டத்தில் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ள ஒகேனக்கல் குடிநீர் திட்டம் திமுக ஆட்சி அமைந்தவுடன் 100 சதவீதம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை வார்த்தை அத்தொகுதி மக்களுக்கு பால் வார்த்தது போல் ஆகிவிட்டது. இதுமட்டுமில்லை.. கனிமொழியை சந்திப்பதற்காகவும், அவரிடம் தங்கள் மனுவை தருவதற்காகவும் நிறைய பெண்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியது ஆச்சரியத்தைதான் ஏற்படுத்தியது..
ஹைலைட்
இதில் ஒரு ஹைலைட் சம்பவமும் நடந்தது.. ஏரியூர் பகுதியில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்து கொண்டே இருந்தது.. கூட்டத்தில் கனிமொழி சீரியஸாக மக்களிடம் விவாதித்து கொண்டிருந்தார்.. அப்போது கனிமொழியிடம் ஒரு பெண், "நாங்கள் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்கள், ஆனால் எங்களை எல்லாத்திலும் புறக்கணிக்கிறார்கள் என்று வருத்தத்துடன் சொன்னார்..
அருந்ததியின பெண்
அவ்வளவுதான்.. இதை கேட்டுக் கொண்டிருந்த கனிமொழி டக்கென எழுந்து வந்து அந்தப் பெண்ணை அப்படியே கட்டிப்பிடித்து கொண்டார்.. இதை அந்த பெண் மட்டுமில்லை, அங்கிருந்த யாருமே இதை எதிர்பார்க்கவில்லை.. "நாங்கள் இருக்கிறோம் உங்களுக்காக" என்ற புரிதலே கனிமொழியின் அந்த அழுத்தத்தில் அனைவராலும் உணர முடிந்தது...! கனிமொழியின் அந்த அரவணைப்பில் "நாங்க எப்போதுமே இருக்கோம் உங்களுக்காக" என்று வலுவான மெசேஜ் அந்த சமுதாய மக்களுக்குப் போய் சேர்ந்து விட்டது என்றே சொல்லவேண்டும்..!