அரசியலிலும் டெலிட் ஆப்ஷன் இருந்தால்.. ரஜினியின் பல பேச்சுக்களை நீக்கலாம்.. ரவிக்குமார் பொளேர்!
ரஜினிகாந்தை விமர்சித்து எம்பி ரவிக்குமார் ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: "எதுக்கு மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவணும்? இதுக்கு அவர் ஒரு புது பாத்திரத்தில் பொங்கல் வைக்கலாமே" என்று ரஜினிகாந்த் கருத்தை விமர்சித்திருந்த எம்பி ரவிக்குமார், தற்போது மீண்டும் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. ரஜினிகாந்த்தின் ட்விட்டர் பதிவு நீக்கத்திற்கு "அரசியலிலும் இப்படிதான் நடந்திருக்கும்" என்.ற இடித்துரைத்து ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
லீலாபேலஸில் ரஜினிகாந்த் பேசியதற்கு பலரும் தங்கள் கருத்துக்களை முன் வைத்திருந்தனர். அந்த வகையில் திமுக எம்பி ரவிக்குமாரும் இதை பற்றி சொல்லும்போது, "ரஜினியின் திட்டங்கள் அவர் தன் தொண்டர்கள் குறித்து என்ன அபிப்ராயம் வைத்திருக்கிறார் என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.. ஆட்சிக்கு வந்த பிறகு கட்சியில் இருப்பவர்கள் ஊழலில் ஈடுபடுவார்கள் என்கிறார்.. தொண்டர்கள்தான் ஊழலில் ஈடுபடுகின்றனர் என்றும் புதுசா ஒரு கருத்தை சொல்கிறார்... தங்கள் உயிரை கூட இழப்பதற்குத் தயாராக இருக்கும் தொண்டர்களை அவமானப்படுத்தும் கருத்தாக இது உள்ளது.
மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் சர்க்கரைப் பொங்கல் வைப்பதுபோல தமிழக அரசியல் இருப்பதாகக் சொல்கிறார்... எதற்கு மீன் குழம்பு வைத்த பாத்திரத்தைக் கழுவ வேண்டும்? அவர் ஒரு புதுப் பாத்திரத்தில் பொங்கல் வைக்கலாமே.. பாசிச மனநிலையில் ரஜினி பேசுகிறார்.. அடிப்படையில் அவர் நல்ல மனிதர்தான்.. ஆனால், அவருடைய கருத்துகள் ஆபத்தாக உள்ளது... மக்களுக்கு எதிரான கருத்துக்களாக உள்ளது... சுருக்கமாக அரசியல் கட்சி குறித்த புரிதல் அவருக்கு இல்லை" என்று விளாசியிருந்தார்.
இப்போதும், ஒரு ட்வீட் பதிவிட்டு சாடியுள்ளார்.. ரஜினிகாந்த் கொரோனா விழிப்புணர்வு குறித்த வீடியோ ஒன்றினை ட்விட்ரில் வெளியிட்டு, பிறகு அது தவறான தகவல் என்பதால் உடனடியாக நீக்கப்பட்டுவிட்டது.. இது மிகுந்த பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த பதிவினை நீக்கியதற்கு காரணம், நீதான், நீயேதான் என்று குடுமிப்பிடி சண்டைகளை ரஜினி ரசிகர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பதிவு நீக்கம் குறித்து விழுப்புரம் எம்பி ரவிக்குமார் சொல்லும்போது, "கொரொனா குறித்து தவறான தகவலைத் தருவதாகக் கூறி திரு ரஜினிகாந்த் அவர்களின் ட்வீட் ஒன்றை ட்விட்டர் நிறுவனம் அகற்றியுள்ளது. அரசியல் தளத்திலும் அப்படி வசதி இருந்தால் அவரது கருத்துகள் பலவற்றுக்கும் அதுதான் நேர்ந்திருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
உடனே ட்விட்டர்வாசிகளோ, "Sir wait....அடுத்த tweet varum..பாருங்க... அட்மின் போட்டது எனக்கு ஒண்ணுமே தெரியாது"என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.