தமிழ்.. தமிழ் என்று தமிழில் உறுதி மொழி எடுத்துவிட்டு... இங்கிலீசில் கையெழுத்து... தமிழிசை தாக்கு
சென்னை: தமிழ்.. தமிழ் என்று தமிழில் உறுதி மொழி எடுத்துவிட்டு, பதவியேற்பில் பல பேர் ஆங்கிலத்தில் கையெழுத்து போட்டு உள்ளார்கள் என்று திமுக எம்.பி க்களை, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக கொண்டு வருகிறதே என்ற ஒரே காரணத்திற்காக சில கட்சிகள் எதிர்க்கின்றனர் என்று குற்றம்சாட்டினார்.
தமிழகத்திற்கு தேவையான பல நல்ல திட்டங்களை முன்னெடுத்து செல்வதில் தமிழக பாஜகவின் பங்கு அதிகமாக இருக்கும். தமிழகத்தில் இருந்து பாஜகவினருக்கு பாராளுமன்ற உறுப்பினர் இல்லையென்றாலும் நிச்சயம் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்கள் வர வேண்டும் என்று பாடுபடுவோம் என்றார்.
செயற்கையான தமிழ்ப்பற்று
மேலும், தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்று சென்றவர்கள் செயற்கையான தமிழ்ப்பற்றை முன்னிறுத்தி அதனை நடைமுறைப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். தமிழ்! தமிழ்! என்று தமிழில் உறுதி மொழி எடுத்துவிட்டு பல பேர் ஆங்கிலத்தில் கையெழுத்து போட்டு உள்ளார்கள்.
தாய்மொழியில் பதவி ஏற்பு
பதவி ஏற்க்கும் பொழுது அவரவர்கள் தாய்மொழியில் பதவி ஏற்பு செய்வது சிறப்பு தான். ஆனாலும் செயற்கையான முறையை அவர்கள் ஏற்படுத்தி உள்ளார்கள்.தமிழ்ப்பற்று, தாய்மொழிபற்று மற்றவர்களை விட பாஜகவுக்கு அதிகம் இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு கட்சியும் ஒரு திட்டத்தை முன்னெடுத்து வரலாம் அதனை ஆதரிக்கவும் செய்யலாம் இல்லையென்றால் எதிர்க்கவும் செய்யலாம். ஆனால் இது ஒரு நல்ல திட்டம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். தேர்தல் செலவை குறைக்க வேண்டும்.அதற்காக செலவிடப்படும் நேரங்கள் குறைக்கப்படலாம்.
திணிக்க வேண்டியது இல்லை
அதுமட்டுமின்றி எப்பொழுதுமே தேர்தல் சூழ்நிலை இருந்து கொண்டே இருந்தால், மக்களுக்கு பல நல்ல திட்டங்கள் கொண்டுவருவதில் கவனம் செலுத்துவது குறையலாம். பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு நாடு ! ஒரே தேர்தல் ! என்பதை திணிக்க வேண்டியது இல்லை. காரணம் பல மாநிலங்களில் பாஜக தான் ஆட்சியில் உள்ளது. மத்தியிலும் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்கிறோம். ஒரே நாடு ! ஒரே தேர்தல் ! என்ற திட்டம் ஜனநாயக முறைப்படி தான் செயல்பட்டுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பாஜக கொண்டு வருகிறது என்பதற்காக சிலர் இதனை எதிர்க்கிறார்கள்.
தொலைநோக்கு திட்டம்
தமிழகத்தில் நிலவும் வறட்சியை, போர்க்கால அடிப்படையில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும், குறை சொல்ல வேண்டும் என்பதற்க்காக குற்றம் சுமத்துகிறார்கள் எதிர்க்கட்சிகள். இன்று குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகள் முன்பு இருந்த பல ஆண்டு கால ஆட்சியில் எந்த ஒரு தொலைநோக்கு திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. தமிழக மக்களின் தாகம் தீர்க்க தான் கோதாவரி காவிரி திட்டம் கொண்டு வர உள்ளது, இந்த திட்டம் வரும் காலங்களை கருத்தில் கொண்டு தொலைநோக்குடன் செயல்பட்டுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.