கல்யாணமான கொஞ்ச நேரத்திலேயே இளமதியை கடத்தியிருக்காங்க.. திமுக எம்பி நாடாளுமன்றத்தில் குரல்
சேலம் இளமதி எங்கே என்று திமுக எம்பி செந்தில்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: "இளமதி எங்கே என்றே தெரியவில்லை. கல்யாணம் ஆகி கொஞ்ச நேரத்திலேயே இளமதி கடத்தப்பட்டிருக்கிறார்... இதற்கான சிசிடிவி ஆதாரங்கள் இருந்தாலும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை... உடனே அவரை மீட்க வேண்டும்' என்று திமுக எம்பி செந்தில்குமார் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள கிராமம் தர்மாபுரியை சேர்ந்தவர் செல்வன்.. 26 வயதாகிறது.. திராவிடர் விடுதலைக் கழகத்தில் உறுப்பினர் ஆவார். அதே பகுதியை சேர்ந்த இளமதி என்ற 23 வயது பெண்ணை காதலித்தார்.. இருவரும் ஒரே கம்பெனியில் வேலை பார்க்கும்போது காதல் ஏற்பட்டுள்ளது!
இவர்கள் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவந்தது.. ஆனால் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் கல்யாணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை.. அதனால் திராவிடர் விடுதலைக் கழக அமைப்பின் தலைமைக் குழு உறுப்பினரான ஈஸ்வரன் என்பவரை அணுகி தனக்கு கல்யாணம் செய்து வைக்க கோரியுள்ளார். இதையடுத்து சேலத்திலுள்ள கொளத்தூர் அருகே உள்ள காவலாண்டியூர் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் 4 நாளைக்கு முன்பு கல்யாணத்தை நடத்தி வைத்துள்ளனர்.
இதையடுத்து, அன்றைய தினமே செல்வன் இளமதியை ஒரு கும்பலும், ஈஸ்வரனை ஒரு கும்பலும் கடத்தி சென்றது.. இளமதியின் தந்தை பாமகவை சேர்ந்தவராம்... பாமக மற்றும் கொங்கு அமைப்பை சேர்ந்தவர்கள்தான் அவர்களை கடத்தி சென்றதாக, கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் திவிகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விசாரணையில், ஈஸ்வரனையும் செல்வனையும் போலீசார் மீட்டனர்... ஆனால் இளமதியை மட்டும் இன்னும் மீட்கவில்லை.. அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. இளமதியை மீட்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவனும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணியும் இதை பற்றி சொல்லும்போது, ''கடத்தப்பட்டு இத்தனை நாள் ஆகியும் பெண் எங்கு, எப்படி இருக்கிறார் என்று இதுவரை எந்தத் தகவலும் இல்லை. இதற்குப் பின்னால் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இச்சம்பவத்தில் ஈடுபட்ட முக்கியமானவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பதால், பெண்ணை மீட்க முடியவில்லையோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. போலீசார் இன்னும் வேகமாக பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்'' என்றார்.
இந்த விவகாரம் இப்போது நாடாளுமன்றம் வரை எதிரொலித்துள்ளது.. இளமதி எங்கே இருக்கிறார் என திமுக எம்பி செந்தில்குமார் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்... அவர் தனது உரையில், "சேலத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதி மற்றும் செல்வன் ஆகிய தம்பதிகள் சிலரால் தாக்கப்பட்டனர்... திருமணம் முடிந்த சில மணிநேரங்களில் இளமதி கடத்தப்பட்டார்... இதற்கான சிசிடிவி ஆதாரங்கள் உள்ளன. இருப்பினும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனே அவரை மீட்க வேண்டும்' என்றார்..
இந்த விவகாரத்தில் பாமக சம்பந்தப்பட்டிருப்பதாலோ என்னவோ நாடாளுமன்றம் வரை தர்மபுரி எம்பி கொண்டு சென்றுள்ளார்.. எனினும் இளமதி கடத்தல் சம்பவம் ஆளும்தரப்பை மட்டுமல்லாமல், பாமகவையும் சங்கடத்திற்கு உள்ளாக்கி உள்ளது.