ஓபிசி இடஒதுக்கீடு தீர்ப்பு... சமூக நீதி போராட்டத்துக்கான வெற்றி... திமுக எம்.பி. வில்சன்!!
சென்னை: ஓபிசிக்கு மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை திமுக வரவேற்கிறது. சமூக நீதிக்கான போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக இதைப் பார்க்கிறோம் என்று வழக்கறிஞரும், மாநிலங்களவை திமுக உறுப்பினருமான வில்சன் கூறியுள்ளார்.
மேலும் இன்றைய தீர்ப்பு குறித்து வில்சன் கூறுகையில், ''உச்ச நீதிமன்றம் மட்டுமே முடிவு எடுக்க முடியும் என்ற இந்திய மருத்துவக் கவுன்சிலின் முடிவை ஏற்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது. மத்திய கல்வி நிலையங்கள் இல்லாத கல்வி நிலையங்களிலும் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்குவதற்கு சட்ட ரீதியாக, அரசியலமைப்பு ரீதியாக எந்த தடைகளும் இல்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவு என்பதால், தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மத்திய அரசின் இடஒதுக்கீடு குறித்த சட்டத்தை கொண்டு வர முடியும்.
மருத்துவ மாணவர் சேர்க்கை அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படிதான் நடந்து வருகிறது. மாணவர்களின் குறைந்தபட்ச தகுதியை மத்திய அரசும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் கருத்தில் கொள்ள வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மூன்று மாதத்தில் சட்டம் இயற்ற வேண்டும். இதற்கான குழுவில் மாநில அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில் ஆகியவற்றை இணைத்துக் கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓபிசியினரின் இடஒதுக்கீட்டு உரிமையை மறுக்க முடியாது- மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்: ஹைகோர்ட்
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எங்களது சமூக நீதிப் போராட்டத்துக்கான வெற்றியாக பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.