ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 27% இட ஒதுக்கீடு.. முழுக்க ஸ்டாலின்தான் காரணம்- திமுக எம்.பி
சென்னை: மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவினருக்கு இந்த ஆண்டில் 27 சதவீத இடஒதுக்கீடும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Recommended Video
இதற்காக சட்டப் போராட்டம் மற்றும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியதால், இந்த வெற்றி முழுக்க திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினைத் தான் சேரும் என்று, ராஜ்யசபா திமுக எம்பியும் வழக்கறிஞருமான வில்சன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப் படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீடு என்ற அடிப்படையில் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன. மற்ற மாநிலங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மருத்துவ இடங்களை வழங்குகிறது.
மருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு...ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #ThankYouMKS
ஓபிசி கோட்டா புறக்கணிப்பு
பொதுவாக மாணவர் சேர்க்கைகளில் ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுகிறது, ஆனால் அகில இந்திய ஒதுக்கீடுகளில் அரசியல் சாசனம் வழங்கிய மண்டல் கமிஷன் பரிந்துரைப்படியான 27% இட ஒதுக்கீட்டை ஓபிசியினருக்கு மத்திய அரசு கடந்த பல ஆண்டுகளாக மறுத்து வந்தது. ஆனால் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு மட்டும் பின்பற்றப்பட்டு வந்தது.
பெருவாரியான மக்கள்
மத்திய அரசின் இந்த அணுகுமுறையால் ஓபிசி மாணவர்களில், 10,000க்கும் மேற்பட்டோரின் மருத்துவ படிப்பு பாழாய் போனது. ஓபிசி என்ற பிரிவின்கீழ்தான் தமிழகத்தின் பல பெரும்பான்மையான ஜாதியினர் வருவார்கள். எனவே பெருவாரியான மக்களுக்கு இது பெரும் பாதகமாக இருந்தது.
சென்னை உயர் நீதிமன்றம்
இந்த நிலையில்தான், மருத்துவ மேற்படிப்புகளில் பாதிக்கப்பட்டுள்ள ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரியும் உச்சநீதிமன்றத்தில் திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.
உரிமை உண்டு
ஓபிசி மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டை மறுப்பது நியாயம் இல்லை என்றும் 27% இடஒதுக்கீடு பெறுவதற்கு ஓபிசி மாணவர்களுக்கு உரிமை உண்டு என கடந்த ஆண்டு அதிரடி தீர்ப்பளித்த போதிலும் மத்திய அரசு சாக்கு போக்குகளை கூறி கடந்த ஆண்டு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் இருந்தது.
நீதிமன்றம் கேள்வி
இதனையடுத்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஒரு வார காலம் மத்திய அரசு அவகாசம் கோரியிருந்தது. இந்த வழக்கு விசாரணையில் எப்போது இடஒதுக்கீடு செய்யப்படும், ஏன் தாமதம் என மத்திய அரசுக்கு நீதிமன்றம் சமீபத்தில் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியது. இந்த வழக்கில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறியது.
பிரதமர் அறிவிப்பு
இந்த நிலையில்தான் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 27%; உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீட்டை நடப்பாண்டிலேயே அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். தமிழகத்தின் அனைத்து கட்சிகளுமே ஒரு மித்த குரல் கொடுத்தது, மத்திய அரசுக்கு எதிராக திமுக நீதிமன்றத்தின் மூலம் நெருக்கடி தந்தது போன்றவை இந்த வெற்றிக்கான காரணம் என்று திமுகவினர் இந்த உத்தரவுக்கு மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்து வருகிறார்கள்.
திமுக எம்.பி. வில்சன்
இதுபற்றி திமுக எம்பி வில்சன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் அனைத்திந்திய கோட்டாவின் கீழ், 27 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைத்திருக்க எங்கள் தலைவர் ஸ்டாலினுக்கு மட்டும்தான் நன்றி சொல்ல வேண்டும். நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தது அவர்தான். உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக, முதலில் பொது நல வழக்கு தொடர்ந்தது திமுகதான். நான் எம்.பி.யாக பதவியேற்றதும் பூஜ்யம் நேரத்தில் நான் பேசிய முதல் பேச்சே 27 சதவீதம் ஓபிசி இட ஒதுக்கீடு பற்றிதான். இந்த பெரும் வெற்றிக்கான அனைத்து பாராட்டுகளும், முதல்வர் மு.க.ஸ்டாலினை சேரும். சமூக நீதியின் பாதுகாவலர் அவர். இவ்வாறு ராஜ்யசபா எம்.பி.யும், வழக்கறிஞருமான வில்சன் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் இந்த இட ஒதுக்கீடு விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஒரு போட்டோ கார்டு மூலமும் அவர் விளக்கியுள்ளார்.