ஹிந்தி படிச்சிட்டு தமிழ் வாழ்க என்று நடிக்கும் திமுக எம்பிக்கள்.. சரமாரியாக விளாசிய எடப்பாடி
Recommended Video
சென்னை: திமுக எம்.பி.க்கள் ஹிந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி, லோக்சபாவில் பதவியேற்றுள்ளனர், எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது என்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிட, கட்டிட பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை பார்வையிட்டார்.
இதன்பிறகு நிருபர்களிடம் அவர் பேசுகையில், தமிழக அரசு ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கு 50.80 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்று தெரிவித்தார். 5 மாத காலத்திற்குள் ஜெயலலிதா நினைவிடம் பணிகள் நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.
தமிழக எம்பிகள் அனைவருமே தமிழ் வாழ்க என்று லோக்சபாவில் கோஷம் எழுப்பினர். ஆனால், அதிமுக எம்பி ரவீந்திரநாத் மட்டும் ஜெய்ஹிந்த் என்று, தெரிவித்தாரே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
தமிழ் வாழ்க கோஷத்திற்கு எதிராக பாரத் மாதா கி ஜே.. பெரியாருக்கு எதிராக ஸ்ரீராம்! லோக்சபாவில் பரபரப்பு
அதற்கு பதில் அளித்த முதல்வர், அது அவர்களுடைய பாணி. நாங்கள் உண்மையை பேசுகிறோம். ஆனால் திமுக எம்பிக்கள் ஹிந்தி படித்துள்ளனர். யார் படித்துள்ளார்கள் என்று உங்களுக்கே தெரியும். தயாநிதிமாறன் ஹிந்தி படித்துள்ளார். ஆனால் தமிழ் வாழ்க என்று சொல்கிறார்.
அப்படி எல்லாம் நாங்கள் நடிக்க மாட்டோம். உளப்பூர்வமாக, மனப்பூர்வமாக செயல்படுவதுதான், அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு வழக்கம். தமிழ்மீது உங்களுக்கெல்லாம் என்ன உணர்வு இருக்கிறதோ, அதே உணர்வுதான், எங்களுக்கும், இருக்கிறது. இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.