எங்களை பார்த்து அவர் எப்படி இதை கூறலாம்... தலைமைச் செயலாளர் மீது திமுக எம்.பி.க்கள் பாய்ச்சல்
சென்னை: மக்கள் அளித்த ஒரு லட்சம் புகார் மனுக்களை தலைமைச் செயலாளரிடம் கொடுக்கச் சென்ற போது தங்களை உதாசீனப்படுத்தும் வகையில் அவர் நடந்துகொண்டதாக திமுக எம்.பி.க்கள் பரபரப்பு புகாரை கூறியுள்ளனர்.
மக்களவை உறுப்பினர்களாகிய தங்களை வைத்துக்கொண்டே தலைமைச் செயலாளர் தனது அறையில் தொலைக்காட்சி சத்தத்தை அலறவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், ''உங்களை போன்ற ஆட்களுக்கு வேறு வேலையில்லை''என தலைமைச் செயலாளர் தங்களை பார்த்து கூறியதாகவும், இதைக்கேட்டு அதிர்ந்து போனதாகவும் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் ஆகியோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வந்தே பாரத் 2வது மிஷன்.. தமிழகத்திற்கு ஏன் விமானம் இல்லை.. மு.க.ஸ்டாலின் கேள்வி
தலைமைச் செயலாளர்
ஊரடங்கு காலத்தில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட ஒரு லட்சம் மனுக்களை தலைமைச் செயலாளர் சண்முகத்திடம் வழங்குவதற்காக திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி ஆகிய நான்கு பேரும் தலைமைச் செயலகம் சென்றனர். இவர்களுக்கு மாலை 5 மணிக்கு தலைமைச் செயலாளர் நேரம் ஒதுக்கியிருந்ததால் அந்த நேரத்தில் அவரை சந்தித்து மனுக்களை அளித்துவிட்டு அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
சந்திப்பு நிறைவு
இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்களில் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி.க்கள் நால்வரும் தலைமைச் செயலாளர் சண்முகம் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர். எதிர்க்கட்சித் தலைவர் அனுப்பி வைத்துள்ள பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என புகார் கூறிய டி.ஆர்.பாலு, தாங்கள் அளித்த மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்ற கேள்விக்கு தலைமைச் செயலாளரிடம் இருந்து சரியான பதிலில்லை எனக் கூறினார்.
டிவி சத்தம் அலறியது
திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலுவை தொடர்ந்து பேசிய தயாநிதி மாறன், திமுக ஆற்றி வரும் நிவாரணப் பணிகளை பார்த்து முதலமைச்சருக்கு பொறாமை இருக்கிறதோ இல்லையோ தலைமைச் செயலாளருக்கு இருக்கிறது என சாடினார். மேலும், எம்.பி.க்களை சந்திக்கிறோம் என்பதை கூட மறந்து டிவி பெட்டியில் சத்தத்தை அலறவிட்டதாக தலைமைச் செயலாளர் மீது தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டினார். மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக ''உங்களை போன்ற ஆட்களுக்கு வேறு வேலையில்லை'' என தலைமைச் செயலாளர் கூறியது அதிர்ச்சி அளித்ததாக தயாநிதி தெரிவித்தார்.
மக்களுக்காக
திமுக என்னதான் நிவாரண உதவிகள் செய்தாலும் அரசு செய்ய வேண்டிய பணிகளை அரசு தான் செய்ய வேண்டும் என்றும், அதற்காகத் தான் ஒரு லட்சம் மனுக்களை தலைமைச் செயலாளரிடம் வழங்கி அதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாகவும் டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்தார். ஆனால் மனுக்களை பெற்றுக்கொண்ட தலைமைச் செயலாளர் தங்களிடம் ஆட்கள் இல்லை என சாதாரணமாக கூறியதாக பாலு புகார் கூறினார்.