முதல்வர் ஸ்டாலின் தலைமையில்.. ஜன.29-ல் திமுக எம்.பிக்கள் கூட்டம்.. துரைமுருகன் அறிவிப்பு
சென்னை: திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பிக்கள் கூட்டம் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலில் வரும் 29 ஆம் தேதி திமுக எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்றும் இந்தக் கூட்டத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக எம்.பிக்கள் செயல்படும் விதம் குறித்து ஆலோசனை நடைபெறும் என்று தெரிகிறது.
அன்பகத்தில் அனல் பறக்கும் கேள்விகள்! திமுக இளைஞரணி பதவிகளுக்கு நேர்காணல் நடத்தும் உதயநிதி ஸ்டாலின்!
பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல்
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31 ஆம் தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், தொடக்க நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். இதைத்தொடர்ந்து 2023-24-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்கிறார்.
2 கட்டங்களாக பட்ஜெட் கூட்டத்தொடர்
பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதற்கட்ட அமர்வுகள் ஜனவரி 31-ந்தேதி முதல் பிப்ரவரி 14-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதன்பிறகு ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு
மார்ச் 12-ந் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. இந்த 2-ம் கட்ட தொடர் ஏப்ரல் 6-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இரு கூட்டங்களையும் சேர்த்து மொத்தம் 27 அமர்வுகள் இடம்பெறுகின்றன.
திமுக எம்பிக்கள் கூட்டம்
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி மத்திய பாஜக அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கூடுகிறது. இதனால், இந்த விவகாரம் அவையிலும் எதிரொலிக்கும் எனத்தெரிகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு சுமார் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், திமுக எம்.பிக்கள் கூட்டத்திற்கு அக்கட்சித்தலைமை அழைப்பு விடுத்துள்ளது. வரும் 29 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் காலை 11 மணிக்கு எம்.பிக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
மு.க ஸ்டாலின் தலைமையில்..
இந்தக் கூட்டத்தில் திமுக மக்களவை, மாநிலங்களவை எம்.பிக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். மத்திய அரசின் 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலை அறிக்கை தொடர்பாக திமுக எம்.பிக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.