திருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா.. பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகள் அறிவிப்பு
சென்னை: திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ம் தேதி திமுக முப்பெரும் விழா நடத்தி கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு விருதும், பொற்கிழியும் வழங்கி கவுரவிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா திருவண்ணாமலையில் செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறுகிறது.
பெரியார் விருது வேணுகோபாலுக்கும், அண்ணா விருது நந்தகோபாலுக்கும் அறிவித்துள்ளது திமுக தலைமைக் கழகம். இதேபோல், கலைஞர் விருது ஜெகதீசனுக்கு, பாவேந்தர் பாரதிதாசன் விருது திருமதி சிந்திரமுகி சத்தியவாணி முத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேராசிரியர் விருது தஞ்சை இறைவனுக்கு வழங்கப்பட உள்ளது.
முப்பெரும் விழா மேடையில் வைத்து இவர்களுக்கு விருது வழங்குவதற்கு முன்பு அவர்களை பற்றிய வரலாற்றையும், கட்சிக்கு ஆற்றிய தொண்டையும் அங்கு கூடும் ஆயிரக்கணக்கான நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் மத்தியில் விளக்கி கவுரவிக்கப்படுவர். மேலும், பயணிகள் தவறவிட்ட பொருட்களை திரும்ப ஒப்படைத்த சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் அதே விழா மேடையில் பரிசளித்து கவுரவிக்கப்படுவது வழக்கமாகும்.