ஸ்டாலின் "இதை" செய்தால் போதும்.. கொங்கு மண்டல ஓட்டுக்களை லட்டு போல அள்ளலாமே.. புலம்பும் சீனியர்கள்!
கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி வாகை சூடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: ஓரிரு அதிரடிகளை கையில் எடுத்தால் போதும், கொங்கு மண்டல வாக்குகளை கொத்தோடு திமுக அள்ளிக் கொள்ளலாம் என்கிறார்கள் அந்த பகுதி திமுகவினர்!
பொதுவாக கொங்கு மண்டலத்தில், வெள்ளாள கவுண்டர் சமுதாயத்தினர் அதிகமாக வாழும் பகுதி ஆகும்.. அடுத்து முதலியார்கள்... அருந்ததியினர்.. என்று பெரும்பாலானோர் இருக்கிறார்கள்.. அது மட்டுமல்லாமல் எம்ஜிஆர் காலத்திலிருந்தே இது அதிமுகவின் கோட்டையும்கூட.
போன சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் இருந்து மட்டும் 61 அதிமுகவினர் வெற்றி பெற்று எம்எல்ஏவானார்கள்.. இதுதான் அதிமுக ஆட்சி அமையவும் முக்கிய காரணமாகவும் இருந்தது..
செல்வாக்கு
இதுநாள் வரை, கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக பொறுப்பு வகித்தது இல்லை என்பதும் அதிமுகவுக்கு கூடுதல் ஸ்பெஷல்... இப்போதுள்ள அதிமுகவை சேர்ந்த முதன்மை அமைச்சர்கள் 4 பேர் இந்த மண்டலத்தில் வலுவாக உட்கார்ந்துள்ளனர்.. நல்ல செல்வாக்கு.. நிறைந்த பண பலம்.. வெட்டி வா என்றால் கட்டி வரும் அளவுக்கு பசை உள்ளவர்கள்.. தேர்தலில் தண்ணீராக இறைப்பவர்கள்.. இதைதவிர தொகுதி மக்களின் குறைகள் பெருமளவு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.
அருந்ததியர்
இது எல்லாவற்றையும்விட ஹாட் டாப்பிக், அருந்ததியர் காலனியில் அந்த மக்களோடு சேர்ந்து எடப்பாடியார் சாப்பிட்டதுதான்.. அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உடனே செய்து தரவும் உத்தரவிட்டுள்ளாராம்.. இதனால் அனைத்து சமுதாய மக்களின் ஆதரவை அதிமுக அரசு அசால்ட்டாக பெற்று வருகிறது.
கேள்வி
ஆனால் திமுக கொங்கு மண்டலத்தில் எப்படி உள்ளது? ஆட்சியில் 10 வருஷமாக இல்லாததற்கு மிக முக்கிய காரணமே இந்த கொங்கு மண்டலத்தை திமுக சரிக்கட்டாததுதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. அப்படி இருந்தும் ஏன் இதில் சரியான கவனத்தையும், களப்பணியையும் மேற்கொள்ளவில்லை என்றும் கேள்வி எழுப்புகிறார்கள் கொங்கு மக்கள்!
பலம்
"பிரசாந்த் கிஷோருக்கு போய் அத்தனை கோடியை கொட்டணுமா? அந்த பணத்தில் இங்கே வந்து ஏதாவது கட்டமைப்புகளை செய்திருந்தால், அது உபயோகமாக இருந்திருக்குமே? பலம் வாய்ந்த வெள்ளக்கோயில் சாமிநாதன், குளித்தலை சிவராமன் போன்றோரை சரியாக பயன்படுத்தி கொண்டுள்ளார்களா? வன்னியர், முக்குலத்தோர் போன்று மற்றொரு பெரும்பான்மை சமூகமான கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்துக்கான பிரச்சனைகளை திமுக தலைமுக ஸ்டாலினிடம் வலியுறுத்த மாநில பொறுப்பில் யாரும் இந்த இடைபட்ட காலத்தில் இல்லாதது பெரிய மைனஸ்.
பாஜக
அதனால், கொங்கு வேளாள கவுண்டர் ஒருவருக்கு சீட் தருவதோ அல்லது பொறுப்பு தருவதோ இருந்தால் வேளாளர்களை ஒன்றிணைத்து, அதன்மூலம் வாக்குகளை அள்ள முடியும்?" என்றும் கொங்கு பகுதி திமுக சீனியர்கள் சிலர் சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, கலைஞர் இருந்தபோது, கொங்கு வேளாளருக்கு பிசி சட்டம் கொண்டுவந்தார்... வன்னியர்களுக்கு எம்பிசிக்கு கொண்டு வந்தார்.. அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு செய்தார்... இப்படி 3 சாதிகளுக்கும் கருணாநிதி செய்த நலன்கள் ஏராளமானவை என்பதால், இப்போது வரை இப்படி இது திமுகவுக்கு கை கொடுத்து வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.. அதேபோல, அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக மீது ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்றவற்றின் அதிருப்திகளும் திமுகவுக்கு சாதகமாகவே உள்ளன.
உதயநிதி
இதைதவிர, ஏற்கனவே திமுக தலைவர், இந்த பகுதியில் மேற்கொண்ட பிரச்சாரங்களும் சரி, உதயநிதி ஸ்டாலின் இதுவரை கொங்குவில் மேற்கொண்ட போராட்டங்களும் சரி, பெரிதும் பேசப்பட்டு வருவதும் திமுகவுக்கு சாதகமாகவே உள்ளது.. அதேபோல, தற்போது அதிமுகவில் செலவு செய்யக்கூடிய அளவுக்கு விஐபிக்கள் உள்ளபோது, இவர்களுக்கு நிகராக திமுகவில் கொங்கு மண்டல நிர்வாகிகளும் தேவைப்படுகிறார்கள்.. பொருளாதார பலத்தை சற்று உயர்த்திவிட்டால் போதும்.. கொங்குவை திமுகவே பெருவாரியாக கைப்பற்றும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன!