இந்த முறையாவது திமுக ஜெயிக்க வேண்டுமா.. கொங்கு மண்டலத்தை கொக்கி போட்டு இழுக்க.. பலே ஸ்கெட்ச்!
கொங்கு மண்டலத்தில் திமுக ஜெயித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது
சென்னை: மிகப்பெரிய நெருக்கடியும், அவசர அவசியமும் திமுகவுக்கு எழுந்துள்ளது.. இந்த முறையாவது கொங்கு மண்டலத்தை தன் வசப்படுத்துமா என்பதுதான் அது!
கொங்கு மண்டலம் என்பது கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. மொத்தம் 61 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.
பொதுவாக கொங்கு மண்டலத்தில், வெள்ளாள கவுண்டர் சமுதாயத்தினர் அதிகமாக வாழும் பகுதி ஆகும்.. அடுத்து முதலியார்கள்... அருந்ததியினர்.. என்று பெரும்பாலானோர் இருக்கிறார்கள்.. வழக்கமாக இதை அதிமுகவின் கோட்டை என்பார்கள். அங்கிருப்பவர்கள் பெரும்பாலும் எம்ஜிஆர் ரசிகர்களும்கூட... அதனால்தான் அங்கு அதிமுக வெற்றி என்பது இவ்வளவு காலமாக எளிதாக நடக்க முடியாத விஷயமாக இருந்து வருகிறது.
தேசிய கண்தான தினம்.. தனது கண்களை தானம் செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
ஜெயலலிதா
எம்ஜிஆருக்கு பிறகு கொங்கு மண்டலத்தை தன் பிடியில் இருந்து விடாமல் இறுக்கமாக பற்றிக் கொண்டு வைத்திருந்தார் ஜெயலலிதா.. போன சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் இருந்து மட்டும் 61 அதிமுகவினர் வெற்றி பெற்று எம்எல்ஏவானார்கள்.. இதுதான் அதிமுக ஆட்சி அமையவும் முக்கிய காரணமாகவும் இருந்தது.. இதற்கு பிறகுதான் எடப்பாடியார் முதல்வராக வர நேர்ந்தது.. இதுநாள் வரை, கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக பொறுப்பு வகித்தது இல்லை என்பதும் அதிமுகவுக்கு கூடுதல் சிறப்புதான்.
மாற்றங்கள்
ஆனால் திமுகவால் ஏன் கொங்கு மண்டலத்தை தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை.. இன்னும் சில மாதத்தில் தேர்தல் வர போகிறது? கட்சியை வலுப்படுத்தவும், பலப்படுத்தவும் மூத்த தலைவர் கே.என். நேரு நேரடியாகவே களம் இறங்கி உள்ளார்.. தமிழக மாவட்டங்களில் அதிரடிகளை கையில் எடுத்து, அந்த ரிப்போர்ட்டையும் தலைமைக்கு அனுப்பி, அதன்மூலம் பல மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன.. இது வரவேற்கப்பட வேண்டியதுதான்.
களப்பணிகள்
ஆனால், இந்த நாலரை வருஷமாக கொங்கு மண்டலத்தை எப்படி பலப்படுத்தி உள்ளது திமுக? தேர்தல் வரும் சமயத்தில்தான் இதையெல்லாம் செய்ய வேண்டுமா? ஆட்சியில் 10 வருஷமாக இல்லாததற்கு மிக முக்கிய காரணமே இந்த கொங்கு மண்டலத்தை திமுக சரிக்கட்டாததுதான்.. அப்படி இருந்தும் ஏன் இதில் சரியான கவனத்தையும், களப்பணியையும் மேற்கொள்ளவில்லை என கேட்கிறார்கள் பொதுமக்கள்!
பிரமுகர்கள்
இதை பற்றி கொங்கு மண்டலத்தை சேர்ந்த திமுக பிரமுகர்கள் சிலரிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னவை இதுதான்.. "இங்கே நிறைய கட்டமைப்புகள் செய்திருக்கணும்.. பிரசாந்த கிஷோருக்கு போய் அத்தனை கோடியை கொட்டணுமா? அதை இங்கே எப்போதோ செலவு செய்திருந்தால் திமுக இந்நேரம் ஆட்சியில் இருந்திருக்குமே? இதோ, இப்போ அந்தியூர் செல்வராஜை நியமித்து இருக்காங்க.. அவரை நியமனம் செய்து இத்தனை மாசம் ஆகிறது.. ஆனால், இதுவரை எவ்வளவு அருந்ததியர்களை கட்சியில் இணைத்திருக்கிறார்? என்ன செய்திருக்கிறார்?
வெள்ளக்கோயில் சாமிநாதன்
வெள்ளக்கோயில் சாமிநாதன் செல்வாக்கானவர்.. இளைஞர் அணியில் பலம் வாய்ந்தவராக இருந்தார்.. அவர் பதவியை திருப்பி வாங்கினது சரியில்லை.. கொங்கு மண்டல இளைஞர் அணியில் இந்த அதிருப்தி இன்னமும் இருக்கு.. அதேமாதிரி, கேபி ராமலிங்கத்தை கைநழுவ விட்டிருக்கவே கூடாது" என்று பொருமுகிறார்கள்.
வன்னியர்கள்
"கலைஞர் இருந்தபோது, கொங்கு வேளாளருக்கு பிசி சட்டம் கொண்டுவந்தார்... வன்னியர்களுக்கு எம்பிசிக்கு கொண்டு வந்தார்.. அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு செய்தார்... இப்படி 3 சாதிகளுக்கும் கருணாநிதி செய்த நலன்கள் ஏராளமானவை.. ஆனால், அப்படியும் திமுகவை இவர்கள் கைவிட்டுவிடுகிறார்கள்.. செங்குந்தர் முதலியார்களுக்கு எதுவுமே செய்யவில்லை.. ஆனாலும் ஐப்பெருந் தலைவர்கள் ஆரம்ப திமுகவில் இருந்ததால் இப்போதுவரை, அவர்கள்தான் திமுகவுக்கு ஓட்டுபோட்டு வருகிறார்கள்" அரசியல் நோக்கர்கள்..
அப்படியென்றால், திமுக இனி என்ன செய்ய வேண்டும்?
முதலில், வன்னியர், முக்குலத்தோர் போன்று மற்றொரு பெரும்பான்மை சமூகமான கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்துக்கான பிரச்சனைகளை முக ஸ்டாலினிடம் வலியுறுத்த மாநில பொறுப்பில் யாரும் இல்லை... அதனால் துணைப் பொதுச்செயலாளர் நியமனத்தில் கொங்கு வேளாள கவுண்டர் ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
கவுண்டர்கள்
இப்படி செய்தால், வேளாளர்களை திமுக பக்கம் ஒருங்கிணைக்க முடியும், அதேசமயம், அதிமுகவின் கொங்கு கவுண்டர் வலிமையை எளிதாகவும் உடைக்க முடியும்.. கொங்கு வேளாளர்களின் நன்மதிப்பையும் பெற முடியும்.. மாநில பொறுப்பில் அச்சமூகத்தினருக்கான பிரதிநிதித்துவத்தை ஸ்டாலின் தர வேண்டும்.. அதற்கு துணை பொதுச்செயலாளராக வெள்ளக்கோயில் சாமிநாதனை நியமித்தால் சிறப்பாக இருக்கும்.
செல்வ கணபதி
இப்போதைக்கு கொங்கு சமூகத்துக்கு முத்துசாமி, வன்னியர் சமுதாயத்துக்கு செல்வகணபதி ரொம்ப ஸ்டிராங்காக உள்ளனர்.. இருந்தாலும், சில மாற்றங்களை செய்ய வேண்டி உள்ளது.. கரூரை மீட்கணும் என்றால், கரூர் சின்னசாமி, கேசி பழனிசாமி 2 பேரிடம் கரூரை ஒப்படைக்க வேண்டும்... மாறி மாறி கட்சிக்கு தாவி வரும் செந்தில் பாலாஜி மீது அங்கு பெரிய அளவிலான மதிப்பு இல்லை... சொன்ன வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்ற முணுமுணுப்புகளும் உள்ளது.. அதனால் கட்சியின் சீனியர்களும், அனுபவஸ்தர்களுமான கரூர் சின்னசாமி, கேசி பழனிசாமிக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
குளித்தலை
மூத்த தலைவரான குளித்தலை சிவராமன் போன்றோரையும் முன்னிலைப்படுத்த வேண்டும்.. இதற்கு காரணம், அதிமுகவை சேர்ந்த முதன்மை அமைச்சர்கள் 4 பேர் இந்த மண்டலத்தில் வலுவாக உட்கார்ந்துள்ளனர்.. நல்ல செல்வாக்கு.. நிறைந்த பண பலம்.. வெட்டி வா என்றால் கட்டி வரும் அளவுக்கு பசை உள்ளவர்கள்.. தேர்தலில் தண்ணீராக இறைப்பவர்கள்.. இவர்களுக்கு நிகராக திமுகவில் கொங்கு மண்டல நிர்வாகிகள் தேவைப்படுகிறார்கள்.. ஆனால் பொருளாதார பலம் வீக்காக உள்ளது.
கணேச மூர்த்தி
மதிமுக கணேசமுமூர்த்தி திறமையானவர்தான்.. மக்களின் நன்மதிப்பை பெற்றவர்தான்.. ஆனால் 5 எம்எல்ஏவுக்கு அவர் செலவு செய்து மொத்தத்தையும் பொறுப்பேற்பாரா என்பது சந்தேகம்தான்.. அதனால் கள ரீதியாக மட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும் திமுக கொங்கு மண்டலத்தை கவனிக்க வேண்டி உள்ளது!!
அதிருப்தி
ஆ.ராசாவை முழுசுமாக நம்பலாம்.. இருந்தாலும் மேல்மட்ட அளவிலேயே அவர் அரசியல் செய்கிறாரே தவிர, சாதீய வாக்குகளை அள்ள மண்டல ரீதியாக அவர் இன்னும் செயல்பட வேண்டும் என்கிறார்கள்.. இது எல்லாவற்றிற்கும் மேலாக கூட்டணி கட்சியான விசிக மீது அதிருப்தி உள்ளது.. 15 வருஷத்துக்கு முன்பு திருமாவளவன் பேசிய பேச்சை இன்னும் கொங்கு மண்டலம் மறக்கவில்லை என்கிறார்கள்... விசிக கூட்டணியில் இல்லை என்றாலே பாதி ஓட்டு அசால்ட்டாக விழுந்துவிடும் என்றும் சொல்கிறார்கள்.
நிர்வாகிகள்
அதனால் திமுக இப்போது தீவிரமாக களமிறங்க வேண்டிய நேரம்.. கருணாநிதி இருந்திருந்தால், இப்படி ஒரு இடைவெளியையே விட்டிருக்க மாட்டார்.. கொங்கு மண்டலத்தில் எங்கு வீக், எங்கு ஸ்ட்டிராங் என்பதில் ஆரம்பித்து, நிர்வாகிகளை தயார் செய்து இந்நேரம் தேர்தலுக்கு ரெடியாக வைத்திருப்பார்.. இனி வரும் நாட்களிலாவது இதை திமுக கையில் எடுக்க வேண்டும்.. காழ்ப்புணர்ச்சிகள், சர்ச்சைகள், அதிருப்திகள் மூத்த தலைவர்கள் யார் மீது இருந்தாலும், அதை தூக்கி தூரமாக போட்டு விட்டு, கொங்குவை கொக்கு போட்டு இழுக்கும் முயற்சியில் முழுசாக இறங்க வேண்டும்!