சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் கிடையாது: மு.க.ஸ்டாலின் திடீர் அறிவிப்பு!
Recommended Video
சென்னை; தமிழக சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வலியுறுத்தப் போவது இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் முடிந்த கையோடு தினகரனை ஆதரிக்கும் கள்ளக்குறிச்சி பிரபு உள்ளிட்ட 3 அதிமுக எம்.எல்.ஏக்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என சபாநாயகர் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதேபோல் குட்கா விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்பட்டது.
இதையடுத்து சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர திமுக நோட்டீஸ் கொடுத்தது. இத்தீர்மானம் ஜூலை 1-ல் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என கூறப்பட்டது.
அதேநேரத்தில் சபாநாயகருக்கு எதிரான முந்தைய திமுகவின் தீர்மானம் தோல்வி அடைந்தது. அப்போது சட்டசபையில் பெரும் களேபரமே ஏற்பட்டது. இம்முறையும் சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் தோல்வி அடையவே வாய்ப்பிருக்கிறது.
தற்போதைய நிலையில் அத்தகைய தோல்வியை திமுக தலைமை விரும்பவில்லை; அதனால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை திமுக கைவிட வாய்ப்பிருப்பதாக நாம் பதிவு செய்திருந்தோம்.
இந்நிலையில் சட்டசபை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வலியுறுத்தப் போவது இல்லை. அன்றைக்கு இருந்த சூழலில் அத்தீர்மானத்தை கொடுத்திருந்தோம். இன்றைக்கு சூழல் மாறி இருப்பதால் வலியுறுத்தவில்லை என்றார்.
மேலும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க அதிமுக அரசு முக்கியத்துவம் தரவில்லை. கடல்நீரை குடிநீராக்கும் புதிய திட்டத்தின் மூலம் சென்னைக்கு எப்போது குடிநீர் கிடைக்கும் என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.