ரஜினிகாந்த் இந்த தேர்தலுக்கு மட்டும் வர வேண்டாம்.. போயஸைத் தொடர்பு கொண்ட இருவர்.. திடீர் பரபரப்பு!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தமிழக சட்டசபை தேர்தல் களத்துக்கு வந்துவிடவே கூடாது என்பதற்காக பகீரத முயற்சிகளில் திமுக இறங்கியிருப்பதாக ஒரு புதுத் தகவல் கூறுகிறது. இது உண்மையா, பொய்யா, அடித்து விடுகிறார்களா.. எதுவும் தெரியவில்லை.. ஆனால் இப்படி ஒரு தகவல் உலா வருகிறது. ரஜினிகாந்துக்கும் திமுக தலைமைக்கும் பொதுவான நெருக்கமான இருவர் இதுதொடர்பாக ரஜினி தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம்.
தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் கூட்டணி கட்சி தொடர்பான விவாதங்கள் தொடருகின்றன. மதிமுக தொடர்ந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் அந்த கட்சியில் எழுந்த சலசலப்பு குறித்து நாம்தான் முதலில் பதிவு செய்தோம்.
தற்போது இந்த பிரச்சனை விஸ்வரூபமெடுத்து மதிமுக தனிச் சின்னத்தில் தொடர்ந்து போட்டியிடும் என அறிவித்திருக்கிறார் வைகோ. இதேபோல் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான திரைமறைவு பேச்சுவார்த்தைகளும் கனஜோராக நடைபெறுகிறது.
ரஜினிகாந்த் கட்சி
இதனிடையே தேர்தல் களத்துக்கு ரஜினிகாந்த் வருவாரா? இல்லையா? என்கிற விவாதங்கள் களைகட்டி இருக்கின்றன. பிப்ரவரி மாதம் கட்சியை தொடங்கி மாநாடு நடத்தி தேர்தலை சந்தித்து விட்டுத்தான் அடுத்த வேலையை ரஜினிகாந்த் பார்க்கப் போகிறார் என அவருக்கு நெருக்கமான அல்லது அவர் மீது நம்பிக்கையான வட்டாரங்கள் தகவல்களைப் பரப்புகின்றன.
திமுகவின் நம்பிக்கை
அதேநேரத்தில் ரஜினிகாந்த் இந்த முறை தேர்தல் களத்துக்கு வந்துவிடக் கூடாது என்பதற்கான மூவ்களை திமுக தலைமை படுதீவிரமாக மேற்கொண்டு வருகிறதாம். திமுகவை பொறுத்தவரையும் எப்படியும் தேர்தலில் நமது ஆட்சிதான் என்கிற அதீத நம்பிக்கையில் இருக்கிறது. இந்த நம்பிக்கைக்கு சேதாரம் வரும் திசை எதுவாக இருந்தாலும் அதை சரிசெய்வது என்பதில் கவனமாகவும் இருக்கிறது.
ரஜினிகாந்தை தடுக்கும் மூவ்
இதனடிப்படையில்தான் ரஜினிகாந்தை இந்த சட்டசபை தேர்தல் களத்துக்கு மட்டும் வரவிடாமல் பார்த்துக் கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவாம். அதாவது ரஜினி குடும்பத்துக்கு மிக நெருக்கமான சென்னையை சேர்ந்த பிரபல மருத்துவர் மற்று ரஜினிகாந்துக்கும் திமுக தலைமைக்கும் மிக நெருக்கமான பொதுவான அமெரிக்க நண்பர் ஆகியோர் மூலமே திமுக இந்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறதாம்.
ரஜினியிடம் பதில் வரவில்லை
தற்போதைய கொரோனா சூழல், ரஜினிகாந்த் உடல்நிலை ஆகியவற்றை சுட்டிக்காட்டி இந்த தேர்தலுக்கு மட்டும் வராமல் இருக்கட்டும்; அடுத்து வரக் கூடிய உள்ளாட்சித் தேர்தலோ, லோக்சபா தேர்தலோ அதில் அவர் களமிறங்கட்டும். இம்முறை மட்டும் ரஜினிகாந்த் ஒதுங்கி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதாகவே திமுக தரப்பில் இருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். ரஜினிகாந்த் தரப்பு இதுவரை இதற்கு சாதகமான பதிலை சொல்லவில்லை. ஆனால்... ரஜினிகாந்துடன் வழக்கமான தொடர்பில் இருக்கும் ஆளும் கோட்டையாருக்கு உடனடியாக திமுகவின் இந்த பகீரத முயற்சிகள் குறித்த தகவல்கள் விரிவாகவே பாஸ்செய்யப்பட்டுவிட்டதாம். திமுகவின் இந்த மூவ்களுக்கு ரஜினிகாந்த் என்ன பதில் தருவார்? ரஜினிகாந்த்- திமுகவின் முயற்சிகளுக்கு நாம் என்ன பதிலடி தருவது? என்பதற்கு ஆளும் கட்சியும் கோதாவில் குதித்திருக்கிறதாம்.