உதயசூரியன் சின்னத்தில் 5 இடங்கள்- இதுதான் பைனல்.. ஓகே கேட்கும் திமுக.. விறுவிறு ஆலோசனையில் விசிக
சென்னை: 9 தொகுதிகள் கேட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தற்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயார் எனில் 5 தொகுதிகள் ஒதுக்குகிறோம் என பதில் தந்துள்ளது திமுக. இந்த தொகுதி பங்கீட்டை ஏற்பதா? இல்லையா? என்பது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
கூட்டணிக்கு தலைமை... முதல்வர் வேட்பாளர் - டிடிவி தினகரன் அழுத்தமாக சொல்லக்காரணம் இதுதானா?
திமுக அணியில் நீண்டகாலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது. லோக்சபா தேர்தலில் 2 தொகுதிகளை கொடுத்தது திமுக. இந்த 2-ல் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில்தான் விசிக போட்டியிட்டு வென்றது.
தனிச்சின்னம் - 2 இடங்கள்
சட்டசபை தேர்தலுக்கும் இதே பார்முலாவை திமுக முன்வைக்கிறது. திமுக அணியில் தனி சின்னத்தில் போட்டியிட 9 தொகுதிகளை கேட்டது விசிக. தனி சின்னத்தில் போட்டியிடுவது எனில் 2 தொகுதிகள்தான் தர முடியும் என ஒரே போடாக போட்டது திமுக தரப்பு.
உதயசூரியன் - 5 தொகுதிகள்
இதனால் ஆடிப்போனது விசிக தரப்பு. இதனால் வேறுவழியே இல்லாமல் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் எத்தனை தொகுதி கிடைக்கும் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. உதயசூரியன் சின்னம் எனில் 4 தொகுதிகள் வரை தர முடியும் என்கிறது திமுக. அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளில் கடைசியாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் 5 தொகுதிகள் கிடைக்கும் என திட்டவட்டமாக சொல்லிவிட்டது திமுக.
முடிவு விசிக கையில்
இப்போது முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் விசிக உள்ளது. விசிகவை பொறுத்தவரையில் திமுக நிபந்தனைகளுடன் கொடுக்கிற தொகுதிகளை அப்படியே ஏற்றுக் கொண்டு கூட்டணியில் நீடித்தாக வேண்டும்; அல்லது திமுக கூட்டணியைவிட்டு வெளியேற வேண்டும்.
தேர்தல் புறக்கணிப்பு- பிரசாரம் மட்டும்?
இந்த இருநிலைப்பாடுகளுக்கு மாற்றாக தொகுதி பங்கீட்டில் திருப்தி அளிக்கவில்லை; ஆனாலும் திமுக கூட்டணியிலேயே நீடிக்கிறோம்; பாஜக-அதிமுகவை வீழ்த்த சட்டசபை தேர்தலில் போட்டியிடாமலேயே திமுக அணிக்கு பணியாற்றுகிறோம்; பிரசாரம் செய்கிறோம் என்கிற நிலைப்பாடு எடுக்க வேண்டும். இது தொடர்பாகத்தான் திருமாவளவன் தீவிரமான ஆலோசனை நடத்தி வருகிறாராம்.