குழப்பங்களின் கோபுரத்தில் நிற்கிறார் முதல்வர் எடப்பாடி... ஆர்.எஸ்.பாரதி சாடல்
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குழப்பங்களின் கோபுரத்தில் நிற்பதாக திமுக அமைப்புச் செயலாளரும், எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
தி.மு.க. தேர்தலைக் கண்டு பயப்படுகிறது என மக்களைக் குழப்பி, அதன் மூலம் முதலமைச்சர் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
நியாயமான கோரிக்கை
உள்ளாட்சி தேர்தலை ஜனநாயக முறைப்படி, சட்ட நெறிமுறைகளின் படி நடத்துங்கள் என்பது மட்டுமே திமுகவின் கோரிக்கை. தேர்தலை நடத்த வேண்டும் என்பதுதான் தி.மு.க.,வின் நோக்கம் என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவசர கோலத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, உச்சநீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை என்பது தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு கேள்வி
வார்டு மறுவரையறை என்று ஒரு ஆணையத்தை நியமித்து - அதில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் மாவட்ட ரீதியாக கொடுத்த ஆட்சேபனை மனுக்களை எல்லாம் கிடப்பில் போட்டு 'வார்டு மறு வரையறை' ஆணை வெளியிட்டது யார்? குழப்பங்களை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே புதிய மாவட்டங்களை பிரித்தது யார்? அரசியல் சட்டப்படியான இட ஒதுக்கீடு பற்றி ஆணை வெளியிடாமல் குழப்பம் செய்வது யார்?
சட்டவிரோதம்
எல்லாவற்றுக்குமே இதுவரை மாநில தேர்தல் ஆணையர் திரு. பழனிசாமி காரணம் என்று நினைத்திருந்தோம். இப்போது மாநில தேர்தல் ஆணையத்திடம் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் திரு. பழனிசாமி பதில் சொல்கிறார் என்றால் - அந்த திரு. பழனிசாமிக்காக இந்த திரு. பழனிசாமிதான் மாநில தேர்தல் ஆணையத்தை சட்டவிரோதமாக செயல்பட வைத்துள்ளார் என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.
குறை சொல்லாதீர்
பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த சட்டப் போராட்டம் நடத்தி வரும் எங்கள் தலைவர் பற்றி , முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறை சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.