முரசொலி விவகாரம்... பொய்யுரைப்போர் முகமூடியை கிழித்தெறிவோம் - ஆர்.எஸ்.பாரதி
சென்னை: முரசொலி அலுவலகம் தொடர்பாக சுமத்தப்பட்டுள்ள வீண்களங்கத்தை உரிய விளக்கம் அளித்து, பொய்யுரைப்போர் முகமூடியை கிழித்தெறிவோம் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
முரசொலி நாளிதழ் அலுவலக இடம் பஞ்சமி நிலம் அல்ல என்பதை நிரூபிப்போம் என மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெளிவாக எடுத்துரைத்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், முரசொலி அறக்கட்டளை அறங்காவலர் குழு உறுப்பினர் என்ற அடிப்படையில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.. கோத்தபய ராஜபக்சேவிற்கு வாழ்த்துகள்.. சஜித் பரபர பேட்டி!
வடிகட்டிய பொய்
முரசொலி நாளிதழ் அலுவலக இடம் குறித்த தவறான - பொய்யான - ஆதாரமற்ற - ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை திட்டமிட்டு, அரசியல் உள்நோக்கத்தோடு, பா.ஜ.க. பிரமுகர் ஒருவர் எவ்வித முகாந்திரமின்றி கொடுத்த புகாரின் அடிப்படையில், தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம், வருகிற 19.11.2019 அன்று சென்னை, சாஸ்திரி பவனில் உள்ள ஆணையத்தின் முன்பு விளக்கம் அளிக்கும்படி கோரியுள்ளது .
அவசரம் ஏன் ?
ஆர்.கே.நகர் தேர்தலில் 89 கோடி ரூபாய் கைப்பற்றிய பணத்தைப் பற்றி இதுவரை விசாரணை ஏதும் நடத்தாத மத்திய பா.ஜ.க. அரசு - 2016 சட்டமன்ற தேர்தலின்போது, மூன்று கண்டெய்னர் லாரிகளில் கைப்பற்றப்பட்ட 560 கோடி ரூபாய் குறித்தும் விசாரிக்காத பா.ஜ.க. அரசு - தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வீட்டில் ரெய்டு செய்து கைப்பற்றப்பட்ட பணம் குறித்து விசாரிக்காத பா.ஜ.க. அரசு திமுக மீது அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் பாஜக பிரமுகர் கொடுத்த பொய்புகாரை அவசரம் அவசரமாக விசாரிப்பதாக சாடியுள்ளார்.
குற்றச்சாட்டு
குட்கா விஜயபாஸ்கர் மீது உள்ள 40 கோடி ரூபாய் ஆவணங்கள் குறித்து விசாரிக்காத பா.ஜ.க. அரசு - ஆண்டுகள் பல உருண்டோடியும், இவ்வாறான சட்டத்திற்கு புறம்பான செயல்கள் குறித்து விசாரணை ஏதும் செய்யாமலும் அதைப் பற்றி கவலை கொள்ளாமலும் கிடப்பில் போட்டுள்ள மத்திய பா.ஜ.க அரசு, தமிழக மக்கள் மத்தியில் கழகத்தின் மீது அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு செயல்படுவதாக கூறியுள்ளார்.
பொல்லாங்கு பேசுவோர்
முரசொலி அறக்கட்டளை அறங்காவலர்களில் ஒருவர் என்ற முறையில் நானும் - கழக வழக்கறிஞர்களும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஆணையத்தின் முன்னிலையில் ஆஜராகி, முரசொலி நாளிதழ் அலுவலகம் இடத்தின்மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சுமத்தப்பட்டுள்ள வீண் களங்கத்தை, உரிய விளக்கங்கள் அளித்து, அதன்மூலம் பொய்யுரைப்போர் - பொல்லாங்கு பேசுவோர் முகமூடியைக் கிழித்தெறிவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.