தேசிய உணர்வுகளுக்கு எதிரானது திமுக- பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சுளீர் தாக்கு
சென்னை: தேசிய உணர்வுகளுக்கு எதிராகவும் தேசத்தின் வளர்ச்சியில் அக்கறையற்றவர்களின் புகலிடமாகவும் திமுக இருக்கிறது என பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா விமர்சித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக எல். முருகன் நியமிக்கப்பட்ட பின்னர் இன்று அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இந்த செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
பாஜகவுடன் தொடர்பு என குற்றச்சாட்டு- ராகுல் காந்தி விளக்கத்தால் ஆவேச ட்வீட்டை நீக்கிய கபில் சிபல்
ஜேபி நட்டா பேச்சு
இதில் பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா பேசியதாவது: தமிழகம் கோவில்கள் நிறைந்த பூமி. உயரிய பண்பாட்டைக் கொண்டது. தேச விடுதலைக்குப் பாடுபட்ட எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் மண் இது. உலகம் முழுவதும் தொழில் முனைவோர்களாக தமிழர்கள் திகழ்கின்றனர். தமிழர்களின் உயரிய பண்பாட்டுக்கு என் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் காலங்களில் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளிலும் சட்டசபையில் பாரதிய ஜனதா கட்சி கணிசமான இடங்களைக் கைப்பற்றும். நாம் நமது வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும்.
கொரோனா எதிர்ப்பு போர்
கொரோனா கால லாக்டவுன் என்பது அரசியல் கட்சிகளுக்கும் கூட லாக்டவுன் என்பதாகிவிட்டது. இருந்தபோதும் மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து தமிழக பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் சீரிய தலைமையில் கொரோனாவை எதிர்த்து நாம் போராடி வருகிறோம்.
கொரோனா மருத்துவமனைகள்
இந்த தேசத்தையும் 130 கோடி மக்களையும் கொரோனாவுக்கு எதிராக உரிய நேரத்தில் முடிவெடுத்து தயார்படுத்தியவர் நமது பிரதமர் மோடி. கொரோனா தொடங்கும் போது அதற்கான மருத்துவமனைகள் எதுவும் இல்லை. இன்று 1500 கொரோனா சிறப்பு மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 12.5 லட்சம் படுக்கைகள் இன்று தயாராக உள்ளன. இந்தியாவில் 50,000 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் கல்வி கொள்கை
நாடு விடுதலை அடைந்தது முதல் முறையாக சுதந்திரமாக பிரதமர் மோடியின் தலைமையில் புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. 1968, 1986-ம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட புதிய கல்வி கொள்கை என்பது வெறும் எண்களை மட்டுமே மாற்றியதாக இருந்தது. கொள்கை ரீதியாக எந்த மாற்றமும் கொண்டுவரவில்லை. தற்போதைய புதிய கல்வி கொள்கையில் தாய்மொழி வழிக் கல்வியை உறுதி செய்திருக்கிறோம்.
திமுக மீது விமர்சனம்
தேசிய உணர்வுகளுக்கு எதிரான கட்சியாக இருக்கிறது திமுக. நாட்டின் வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர்களுக்கு புகலிடமாக இருக்கிறது திமுக. இத்தகைய சக்திகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். இவ்வாறு ஜேபி நட்டா பேசினார்.