அடுத்தடுத்த நாட்களில் திமுகவுக்கு திடீர் நெருக்கடி.. விஸ்வரூபம் எடுக்கும் 3 சவால்கள்
Recommended Video
சென்னை: கடந்த சில நாட்களாக, தமிழகத்தில் நடைபெற்று வரும், அரசியல் வியூகங்கள் திமுகவுக்கு செக் வைப்பது போல உள்ளன.
இந்த லோக்சபா தேர்தல் முடிவுகளின்போது, தேசிய அளவில், திமுக தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகும் என்று அந்த கட்சியினர் நம்பி உள்ளனர்.
இந்த நிலையில் திமுகவுக்கு முட்டுக்கட்டை போடும் வேலைகளில் மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆளும் கட்சிகள் தீவிரமாக இறங்கி உள்ளன, என்பதை கடந்த சில நாட்களாக நடைபெறும் நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
செம வெயிலு.. கூலிங் கிளாஸுடன் ஒட்டபிடாரத்தை வலம் வந்த ஸ்டாலின்.. ஜில் ஜில் பதநீர் அருந்தி பிரச்சாரம்
கமல்ஹாசன் பேச்சு
அரவக்குறிச்சி இடைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, மக்கள் நீதி மையம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று தெரிவித்தார். இந்த பேச்சு தேசிய அளவில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் சிறுபான்மையினர் காவலர் என்ற பிம்பம் கமல்ஹாசனுக்கு உருவாகியுள்ளது. ஏற்கனவே இது போன்ற பிம்பம் திமுகவுக்கு உள்ள நிலையில், கமல்ஹாசனும் அதே போன்ற பிம்பத்தை உருவாக்கி உள்ளார். அவர் ஏற்கனவே திராவிட கொள்கைகளில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது திமுகவின் வாக்கு வங்கியை பதம்பார்க்கும் என்று கூறப்படுகிறது.
முதல் சவால்
கமல்ஹாசன் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் தீவிரமாக எதிர்வினையாற்றி வருகிறார்கள். திமுக மற்றும் அதிமுக என்ற மோதல் மறைந்து கமல்ஹாசன் மற்றும் அதிமுக-பாஜக என தேர்தல் களத்தின் நிறம் மாறியுள்ளது. இந்த மோதலை பாஜக விரும்புவதாக கூறப்படுகிறது. இதன் மூலமாக சிறுபான்மையினர் ஆதரவு கட்சி என்ற பிம்பத்தை மக்கள் நீதி மய்யம் பெற்றுள்ளது. இது கண்டிப்பாக திமுகவுக்கு ஒரு சவாலான விஷயம்தான்.
தமிழிசை வீசிய குண்டு
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு மற்றொரு குண்டை தூக்கி வீசியுள்ளார் பாஜக தமிழ் மாநில கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். பிரதமர் நரேந்திர மோடியுடன் ஸ்டாலின் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இப்படித்தான் ஆர்கே நகரில் இடைத் தேர்தல் நடைபெற்றபோது, கோபாலபுரம் இல்லத்துக்கு நரேந்திர மோடி சென்று அப்போது உடல் நலிவுற்றிருந்த கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். அவரை வாசல் வரை வந்து வரவேற்றவர் மு.க.ஸ்டாலின்.
இரண்டாவது சவால்
இதனால் சிறுபான்மையினர் மத்தியில் திமுக மீது நம்பிக்கை குறைந்து விட்டது என்றும், எனவேதான் ஆர்கே நகர் தேர்தலில் அக்கட்சி டெபாசிட்டைப் பறி கொடுத்து தோற்க நேரிட்டது என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறினார்கள். இப்போது நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மோடியுடன் ஸ்டாலின் நெருக்கமாக இருக்கிறார் என்ற தோற்றத்தை உருவாக்க முயல்கிறது பாஜக. இது திமுகவுக்கு இரண்டாவது மிகப்பெரிய சவாலாகும்.
3 சவால்கள்
இது மட்டுமா, நேற்று சென்னையில் ஸ்டாலினை அவரது இல்லத்தில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் சந்தித்துப் பேசி விட்டுச் சென்றுள்ளார். இவர் மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில், இருப்பவர். எனவே, காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள ஸ்டாலின் இவரை எதற்காக சந்திக்கச் சம்மதித்தார் என்ற கேள்வியை பாஜக எழுப்பி திமுகவுக்கு செக் வைத்துள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு தான் சந்திரசேகராவை வருமாறு ஸ்டாலின் அழைத்ததாக, கூறப்பட்டாலும் இந்த சந்திப்பு கண்டிப்பாக பொதுமக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த மூன்று முக்கிய சவால்களை தாண்டி, நான்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக சாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அனைத்திற்கும் விடை மே 23-ம் தேதி கிடைத்துவிடும்.