யாகம் செய்தாலும் யோகா செய்தாலும் கேலி செய்கிறார்கள்... தமிழிசை சௌந்தரராஜன் வருத்தம்
சென்னை: யாகம் செய்தாலும் யோகா செய்தாலும் எதிர்கட்சியினர் கேலி செய்வதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனசங்க நிறுவனர் ஷியாம பிரசாத் முகர்ஜியின் 66-வது நினைவு நாளையொட்டி, அவரது உருவ படத்திற்கு தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழிசை சௌந்தரராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவினர் யாகம் நடத்தியதால் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ததாகவும், யாகம் செய்வதை எதிர்கட்சியினர் விமர்சிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
மேலும், மழை பொய்த்ததால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க நடவடிக்கை ஒருபுறம் எடுத்தாலும் இன்னொரு புறத்தில் மழை வேண்டி யாகம் நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் கோவில்களில் மழை வேண்டி அமைச்சர்களும், அ.தி.மு.க.வினரும் யாகங்கள் நடத்தினார்கள்.
இதனையும், குடிநீர் வேண்டும் என்று போராட்டம் நடத்தி வரும் தி.மு.க., தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க திறமையற்ற அரசு யாகம் நடத்துகிறது என்று விமர்சிக்கிறது என்று கூறினார். தி.மு.க.வினர் யாகம் நடத்தினாலும், யோகா நடத்தினாலும் கேலி செய்கிறார்கள். ஆனால் தண்ணீருக்காக போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டம் நடத்தினால் தண்ணீர் வந்துவிடுமா? என்று கேள்வி எழுப்பிய அவர், யாகம் நடத்தியதால் தான் மழை பெய்துள்ளதாக கூறினார்.
சர்வதேச யோகா தினத்தன்று, சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் யோகா பயிற்சி மேற்கொண்டனர். அவர்களுடன் நடிகை தன்ஷிகாவும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.