சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்.. திமுக உடனடி பதிலடி!
சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர திமுக மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: 3 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்அனுப்பிய நிலையில், அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் நோட்டீஸ் விவகாரம் வெளியான அடுத்த சில
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி இவர்கள் 3 பேரும் அதிமுகவில் இருந்தாலும், ஆரம்பம் முதலே எதிராக செயல்பட்டு வருகிறார்கள்.
அதுமட்டுமில்லை.. நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரங்களில்கூட அமமுகவுடன் இணைந்து செயல்பட்டதாக இவர்கள் மீது ஒரு புகார் சபாநாயகரிடம் தரப்பட்டது.
மைனாரிட்டி அரசு
ஒருவேளை இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் என்று ஏற்கனவே மு.க.ஸ்டாலின் சொல்லி இருந்தார். இந்த விஷயத்தில் பேரவை தலைவர் அவசரம் காட்டி மைனாரிட்டி அரசுக்கு ‘கொல்லைப்புற வழியாக' மெஜாரிட்டி தேடித்தர முயலக் கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதிமுக
ஆனால், அதிமுகவிற்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்போ, சட்டமன்ற தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றால் நாங்க அப்பக்கூட அதிமுகவைதான் ஆதரிப்போம் என்று 3 பேருமே சொல்லி இருந்தார்கள்.
நோட்டீஸ்
எனினும், தினகரன் ஆதரவு எம்எல்ஏ 3 பேருக்கும் சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இவர்கள் 3 பேர் அளிக்கும் விளக்கம் திருப்திகரமாக இல்லாவிட்டால் அவர்களை தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது!
ஆர்.எஸ் பாரதி
இதனிடையே, ஏற்கனவே சொன்னது போலவே, திமுகவும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான மனுவினை அளித்துள்ளது. திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி, கு.க. செல்வம், கிரிராஜன் ஆகியோர் இந்த மனுவை சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் அளித்துள்ளனர்.
ஜனநாயக படுகொலை
மனு அளித்த பின்னர் திமுக வழக்கறிஞர் அணி செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களிடம் பேசுகையில், சபாாநாயகர் தனபால் 3 அதிமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பது ஜனநாயக படுகொலையாகும். சபாநாயகர் பாரபட்சமாக செயல்படுகிறார். எனவேதான் அவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரவுள்ளோம். 15 நாட்களுக்கு முன்பு இதுதொடர்பாக நோட்டீஸ் அளிக்க வேண்டும். அதன்படியே இன்று நோட்டீஸ் அளித்துள்ளோம் என்றார் பாரதி.
ஒரு வரி தீர்மானம்
திமுக தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானம் ஒரு வரியில் அமைந்துள்ளது. அதில், மாண்புமிகு சட்டமன்ற பேரவைத் தலைவர் அவர்கள் மீது இந்த அவைக்கு நம்பிக்கையில்லை என்று கூறப்பட்டுள்ளது. திமுக கொடுத்துள்ள நோட்டீஸ் ஏற்கப்பட்டால் இந்த ஒரு வரித் தீர்மானம் விவாதத்திற்கு விடப்பட்டு பின்னர் வாக்கெடுப்பு நடைபெறும்.
ஸ்டாலின் கடிதம்
முன்னதாக சபாநாயகர் தனபாலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. அதில் சபாநாயகர் மீதான நம்பிக்கை இன்மைக்கான காரணங்களை விளக்கியுள்ளார் மு.க.ஸ்டாலின். இந்தக் கடிதமும் சட்டசபை செயலாளரிடம் அளிக்கப்பட்டது.
திமுக அதிரடி
3 அதிமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான மனு என திமுகவின் உடனடி மூவ்.. என்று அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.