லோக்சபா, சட்டசபை இடை தேர்தல்.. திமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம்.. அன்பழகன்
மார்ச் 1 முதல் விருப்ப மனு அளிக்கலாம் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
சென்னை: திமுக சார்பில் லோக்சபா மற்றும் சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என திமுக கழகம் அறிவித்துள்ளது.
மக்களவை பொதுத்தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. அதற்கான தேதியும் வரும் மார்ச் மாத துவக்கத்தில் அறிவிக்கப்பட்டு விடும் என தெரிகிறது. இதற்கான கூட்டணிகளையும் பிரதான கட்சிகள் அமைத்து வருகின்றன.
தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி.4 முதல் 10-ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக அறிவித்திருந்தது. பிறகு இந்த கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது.
க.அன்பழகன்
இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் திமுகவினர் சார்பில் போட்டியிட விரும்புவோரும் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பினை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார்.
விருப்ப மனு
அதில், திமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு வரும் 25 ஆம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்படும் எனவும் வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.25 ஆயிரம் என்றும் தெரிவித்துள்ளார்.
மார்ச் 1 முதல்..
மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மார்ச் 1 முதல் மார்ச் 7-ம் தேதிக்குள் சேர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ரூ. 1000 செலுத்தி விண்ணப்பப் படிவத்தைப் பெறலாம்.
இடைத்தேர்தல்
அதேபோல் 21 தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிட விரும்புபவர்களும் விருப்ப மனு பெற்று இதே காலகட்டத்தில் தாக்கல் செய்யலாம் என்றும் அன்பழகன் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.