விக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக
Recommended Video
சென்னை: விக்ரவாண்டி தொகுதியை பொறுத்தவரை திமுக மானப்பிரச்சனையாக கருதுவதால், எப்படியாவது அங்கு வெற்றிபெற்றாக வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டுகிறது.
விக்ரவாண்டி தொகுதி வன்னியர்கள் நிறைந்த பகுதி என்பதால், அவர்களை கவர்ந்து ஓட்டுக்களை பெறும் வகையில் உள் இட ஒதுக்கீடு, மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஏ.கோவிந்தராஜூவுக்கு மணிமண்டபம் என பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின். இதனை விமர்சித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் அறிக்கை வெளியிட்டார்.
அதிமுகவை பொறுத்தவரை கூட்டணியில் பாமக உள்ளதால், சற்று தைரியமாக உள்ளது. வன்னியர்கள் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பாமக பெற்றுக்கொடுத்து விடும் என அதீத நம்பிக்கையில் உள்ளது அதிமுக தலைமை. ஆனால், கள நிலவரமோ வேறு மாதிரியாக உள்ளது. தேமுதிகவினருக்கு கிடைக்கும் மரியாதை கூட அதிமுகவிலிருந்து தங்களுக்கு கிடைக்கவில்லை என புலம்புகின்றனர் பாமகவினர்.
மேலும், திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவு கோரி ஜெகத்ரட்சகன் எம்.பி. ஊர் தவறாமல் சென்று தனது வன்னிய சமுதாயத்தை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து பேசி வருகிறார். இதனால் பதற்றம் அடைந்த அதிமுக பாமக நிறுவனர் ராமதாஸிடம் அது தொடர்பாக பேசியதாம்.
திமுக தலைவர் ஸ்டாலின் விக்ரவாண்டி தொகுதி பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு நேற்று சென்னை திரும்பிய நிலையில், களத்தில் இறங்குகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். தொகுதி முழுவதும் வலம்வந்து எப்படியாவது அதிமுகவை வெற்றிபெற வைத்து தங்கள் பலத்தை உணர்த்த வேண்டும் என நினைக்கிறது பாமக. இதனால் அங்கு திமுக-பாமக இடையே தான் மல்லுக்கட்டு நடைபெறுகிறது, அதிமுக அதை வேடிக்கை மட்டுமே பார்க்கிறது.