நவம்பர் 10-ம் தேதி திமுக பொதுக்குழு... வரிசை கட்டி நிற்கும் பஞ்சாயத்துகள்
சென்னை: நவம்பர் 10-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் பொதுக்குழு நடைபெறும் எனக் கூறியுள்ளார்.
மேலும், கழக ஆக்கப்பணிகள், உள்ளாட்சித் தேர்தல், உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கலந்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
கேப்டவுனாக மாறப் போகிறது சென்னை.. ஒரு சொட்டு நீருக்காக அலைய நேரிடும்.. அமைச்சர் எச்சரிக்கை!
நவ.10-ம் தேதி
திமுக பொதுக்குழு கூட்டம் நவம்பர் 10-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அக்கட்சியில் இப்போதே பரபரப்பு தொற்றிக்கொண்டது. இன்னும் சரியாக 9 நாட்கள் மட்டுமே உள்ளதால் பொதுக்குழுவுக்கு ஏற்பாடுகளை தலைமைக் கழக நிர்வாகிகள் தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.
திடலில் பொதுக்குழு
திமுக பொதுக்குழு வழக்கமாக அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் தான் நடைபெறும். பெரும்பாலும் இந்தக் கூட்டம் வெளியிடங்களில் நடைபெறுவது அரிதான ஒன்று. இந்நிலையில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.திடலில் இந்த முறை பொதுக்குழு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
கூட்டணி விவகாரம்
பொதுக்குழுவில் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி தொடர்பாகவும், கட்சி நிர்வாகிகள் செயல்பாடுகள் பற்றியும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், கட்சியில் புதிய அணியை உருவாக்குவது (அதிமுகவை போல் இளம்பெண்கள் பாசறை) பற்றியும் இந்தப் பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
முதல் பொதுக்குழு
திமுக இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்றதற்கு பின்னர் உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக கலந்துகொள்ள உள்ள பொதுக்குழு கூட்டம் என்பதால், கட்சியின் இளம் ரத்தங்கள் மத்தியில் உற்சாகம் பீறிட்டுள்ளது.