சுபஸ்ரீ பெற்றோருக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்...
Recommended Video
சென்னை: பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவுக்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் கடந்த வாரம் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் விளைவாக அரசியல் கட்சித் தலைவர்கள் தாங்களாக முன்வந்து கட்சி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்கவேண்டாம் என அறிக்கை வெளியிட்டனர்.
பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், லாரி ஓட்டுநர், பேனர் அடித்தவர், என அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சுபஸ்ரீ இழந்து வாடும் அவரது பெற்றோரை அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர்.
முதல் ஆளாக சுபஸ்ரீ வீட்டுக்கு ஓடோடி சென்ற மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், அவரது பெற்றோருக்கு தனது வருத்தத்தை தெரிவித்துக்கொண்டதோடு ஆறுதலையும் கூறிச்சென்றார். இதையடுத்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்று துக்கம் விசாரித்தார். மேலும், பேனர் கலாச்சாரத்தை திமுக இனி எப்போதும் பின்பற்றாது எனவும் கூறினார்.
இந்நிலையில், இன்று காலை சுபஸ்ரீ வீட்டுக்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுபஸ்ரீ பெற்றோரிடம் ஆறுதல் தெரிவித்தார். மனம் உடைந்த நிலையில் இருந்த சுபஸ்ரீயின் தந்தைக்கு தைரியம் ஊட்டினார். மு.க.ஸ்டாலினிடம் பேசும் போது சுபஸ்ரீ தந்தையின் குரல் தழுதழுத்தது. ஸ்டாலினுடன் டி.ஆர்.பாலு எம்.பி., தாமோ அன்பரசன் உள்ளிட்டோரும் சுபஸ்ரீ வீட்டுக்கு சென்றனர்.