வெங்காயம் தானே என நினைக்காதீர்கள்... அது ஆட்சிக்கே முடிவுரை எழுதிவிடும் -மு.க.ஸ்டாலின்
சென்னை: வெங்காயத்தை உரிக்கும் போது தான் முன்பெல்லாம் கண்ணீர் வரும், ஆனால் இப்போது வெங்காயம் விற்கும் அநியாய விலையை நினைத்துப் பார்த்தாலே கண்ணீர் வருகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், அத்தியாவசியப் பொருட்களின் இருப்பிலும், விலையிலும், விநியோகத்திலும் அலட்சியம் காட்டினால், ஆட்சியாளர்கள் மக்களிடம் இருந்து வெகு தூரம் அந்நியப்பட்டுப் போய் விடுவார்கள் எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கிடுகிடு உயர்வு
தங்கம், வெள்ளி, டீசல், பெட்ரோல் போல, வெங்காயமும் இன்று கிடுகிடு விலையை வேகமாக எட்டிப் பிடிக்கும் பொருள்களுள் ஒன்றாக ஆகிவிட்டது அல்லது ஆக்கப்பட்டு விட்டது. இன்றைய விலை நிலவரத்தில் தங்கம், வெள்ளி, டீசல், பெட்ரோலுக்கு அடுத்து வெங்காயத்தையும் ஊடகங்கள் வெளியிடுகின்றன.
ஒரே நாளில் இல்லை
வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் வழக்கத்தை விட மிகக் குறைந்த அளவே வெங்காயம் வாங்கிச் செல்கின்றனர்; பெரும்பாலானோர் வாங்குவதையே நிறுத்திவிட்டார்கள். இந்த விலை உயர்வு ஒரே நாளில் நடந்துவிடவில்லை. தினந்தோறும் உயர்ந்து உயர்ந்து, இன்றைக்கு இவ்வளவு அதிக விலையில் வந்து நங்கூரம் போட்டு நிற்கிறது.
நடவடிக்கை
இந்த விலை உயர்வு குறித்து தமிழக அரசு சிறிதேனும் கவலை கொண்டதா? அதனைக் குறைப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா? என வெளியில் தெரியவில்லை!'இதெல்லாம் நம்முடைய வேலையா?' என்ற அலட்சியத்தில் ஆட்சி நடத்துகிறார்களா?
தவறவிட்டது அரசு
வெங்காய விலை உயரவு தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏற்பட்ட பிரச்சினை அல்ல; மற்ற மாநிலங்களுக்கும் இதே நெருக்கடிதான் என்று முதலமைச்சர் பேட்டி கொடுத்திருக்கிறார். ஆனால், மற்ற மாநிலங்கள் இந்த நெருக்கடியைப் பெருமளவுக்குச் சமாளித்துவிட்டன. தமிழகம் வழக்கம்போல, எல்லாவற்றையும் போல, வெங்காய விலையை மக்களின் தாங்கும் சக்திக்கேற்ப கட்டுப்படுத்துவதிலும் மிகவும் பின்தங்கி விட்டது.
முதல்வருக்கு கேள்வி
இந்தியா முழுவதும் வெங்காயம் அதிக விலைக்கு விற்றாலும், மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் விலை கட்டுக்குள் இருக்கிறது.வெங்காயம் கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட, அந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இதனை ஏன் தமிழக அரசால் செய்ய முடியவில்லை?