கடன் தவணைகளை செலுத்தக் கோரி... அராஜகத்தை அரங்கேற்றும் வங்கிகள் -மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
சென்னை: கடன் தவணைகளை செலுத்த ரிசர்வ் வங்கி கால அவகாசம் அளித்துள்ள நிலையில், தான்தோன்றிதனமாக வங்கிகள் மிரட்டலில் ஈடுபடுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு மாறாக அராஜகத்தை அரங்கேற்றும் வங்கிகளின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மலைகிராமங்களுக்கு 7 கி.மீ. நடக்கும் திமுக எம்.எல்.ஏ... நெகிழும் மலைவாழ் மக்கள்
ஸ்டாலின் புகார்
விவசாயிகளுக்கு இடி மேல் பேரிடி போல் - கடன் தவணையைக் கேட்டு மிரட்டும் செயலும் அ.தி.மு.க. ஆட்சியில் தொடருகிறது. வங்கிக் கடன் தவணையைத் திருப்பிச் செலுத்திட வேண்டும் என்று ஆக்ஸிஸ் வங்கி அதிகாரிகளால் மிரட்டப்பட்டதால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மானூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜாமணி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாறி மாறி அறிவிப்பு
"கொரோனா காலத்தில் வங்கிக் கடன் தவணைகளைச் செலுத்தக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது" என்று மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நாட்டு மக்கள் முன்பும்- உச்சநீதிமன்றத்திலும் மாறி மாறி அறிவித்து வருகின்றன. ஆனால் ரிசர்வ் வங்கியின் உத்தரவையும் மீறி வங்கித் தவணையைச் செலுத்த வேண்டும் என்று விவசாயிகளை வங்கிகள் தான்தோன்றித்தனமாக மிரட்டுகின்றன.
அணுகுமுறை ஒன்று
‘அறிவிப்பு ஒன்றும்' ‘அணுகுமுறை வேறுமாக' அராஜகத்தை அரங்கேற்றும் வங்கிகளின் எதேச்சதிகார நடவடிக்கைகளை, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தலையிட்டுத் திருத்தாமல் வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. ரிசர்வ் வங்கியின் ‘கால அவகாசம் அளிக்கும்' உத்தரவினை மீறிக் கடன் தவணையை வசூலிக்கும் வங்கிகளின் லைசென்சை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
முகவர் மீது புகார்
ரிசரவ் வங்கியின் அறிவிப்பிற்கு எதிராக வங்கிக் கடன்களின் தவணைத் தொகையைத் திருப்பிச் செலுத்த மிரட்டி - விவசாயி ராஜாமணியின் தற்கொலைக்குக் காரணமான வங்கி அதிகாரிகள் மற்றும் அதன் கடன் வசூல் முகவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து உடனடியாக அவர்களைக் கைது செய்திட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.