ஹைட்ரோகார்பன்: சுற்றுச் சூழல் அனுமதி தேவை இல்லை - உத்தரவை வாபஸ் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்ற புதிய உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நாளை கூடும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று கொள்கை முடிவினை எடுத்து தமிழக மக்களின் நலன்களைக் காப்பாற்றிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கார்ப்பரேட்
ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் தோண்ட "சுற்றுச்சூழல் அனுமதியும்" "மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டமும்" தேவையில்லை என்று, சுற்றுச்சூழலையும் வெகுமக்கள் எண்ணத்தையும் பின்னுக்குத் தள்ளிச் சிறுமைப்படுத்தி, மத்திய பா.ஜ.க. அரசு கார்ப்பரேட் அணுகுமுறையுடன் அறிவித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாலைவனம்
காவிரி டெல்டாவை பாலைவனமாக்கி - விவசாயிகளின் வயிற்றிலடித்து, அவர்களுடைய வாழ்வாதாரத்தை அடியோடு நாசப்படுத்தும் இந்த அனுமதிகள் எதிர்கால சமுதாயத்தையும் - தமிழகத்தையும் மிக மோசமான சுற்றுச்சூழல் ஆபத்துகளுக்கு உள்ளாக்கும் செயலாகும். மனிதநேயம் சிறிதேனும் இன்றி எடுக்கப்படும் இந்த முடிவுகள், மனிதகுலத்திற்கே பேரிடராக முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
சட்டமன்றம்
தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதிக்கமாட்டோம் என்று சட்டமன்றத்தில் உறுதியளித்த அ.தி.மு.க. அரசு, அதுதொடர்பாக எவ்வித கொள்கை முடிவையும் இதுவரை எடுக்காமல், வேண்டுமென்றே காலம் தாழ்த்தி, மத்திய அரசின் செயலுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரவேற்று வருகிறது.
கோரிக்கை
நாளை கூடவிருக்கும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று கொள்கை முடிவினை எடுத்து தமிழக மக்களின் நலன்களைக் காப்பாற்றிடவும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.