இலங்கை அதிபரை நல்வழிப்படுத்தி... ஈழத்தமிழர்களுக்கு மோடி உதவ வேண்டும் -மு.க.ஸ்டாலின்
சென்னை: இலங்கையில் தமிழர் பகுதிகளில் இராணுவக் குவிப்புக்கும், தமிழ்ப் பெயர்களை அழிப்பதற்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் .
மேலும், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை நல்வழிப்படுத்தி ஈழத்தமிழர்களுக்கு பிரதமர் மோடி உதவிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
ராமசாமி படையாச்சியார் நினைவு மண்டப திறப்பு விழா... அழைப்பிதழ் பெயர் சர்ச்சை
கண்டனம்
"பட்ட காலிலேயே படும்" என்பதற்கொப்ப, பட முடியாது இனி துயரம் ; பட்டதெல்லாம் போதும் என்று, துன்ப துயரங்கள் அனைத்தையும் அனுபவித்துச் சோர்ந்து போயிருக்கும் ஈழத்தமிழர்களை, எடுத்த எடுப்பிலேயே, "இலங்கையில் தமிழர் பகுதிகளில், துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் இனிமேல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவார்கள்" என்று அறிவித்துள்ளதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏமாற்றம்
புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவிப் பொறுப்பேற்ற ஈரம் காய்வதற்குள், தமிழர்களின் இதயங்களைக் காயப்படுத்தி, இந்தியாவின் அப்பாவி மீனவர்களின் மீதான தாக்குதலை அதிகரித்து இருப்பதுமான அநியாயம், உலகத் தமிழர் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அன்புடன் கேட்கிறேன்
இலங்கையில் அமைந்துள்ள ராஜபக்ச குழுமத்தின் புதிய அரசில், தமிழர்களுக்கு நேர்ந்துள்ள இந்த நெருக்கடி குறித்து, மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து, அதன் எதிர்காலப் பரிமாணங்களை ஆழ்ந்து பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க ஆவன செய்திட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, மிகுந்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நம்புகிறேன்
பிரதமர் மோடி அவர்கள் ஈழத்தமிழர் பிரச்சினையை, கோத்தபய ராஜபக்ச அவர்களிடம் உரிய முறையில் எடுத்துரைத்து, அவரின் உள்ளத்தின் ஓரத்தில் இருக்கும் தீயை அணைத்து, அவரை நல்வழி - நியாயவழிப்படுத்தி, ஈழத் தமிழர்களுக்கு உதவிடும் அக்கறையான நடைமுறையை மேற்கொள்ளப் பெரிதும் வலியுறுத்துவார் என நம்புகிறேன்.