உலகிலேயே அதிமுக அரசுக்கு தான் 'முதல் பரிசு' கிடைக்கும்... முதல்வரின் நடவடிக்கைகள் அப்படி -ஸ்டாலின்
சென்னை: கொரோனா நோய்த் தொற்றை எப்படிக் கையாளக்கூடாது என்பதற்கான 'முதல் பரிசு' உலக அளவில் எடப்பாடி பழனிசாமி அரசுக்குத்தான் கிடைக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் பொய்களையும், புரட்டுகளையும் பட்டியலிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
ஸ்டாலின் சொல்லசொல்ல அச்சு பிசகாமல் அப்படியே செய்கிறார் எடப்பாடி.. உதயநிதி போட்ட டுவிட்
கண்துடைப்பு நாடகம்
இன்று தமிழகத்தின் பொருளாதாரம் படுபாதாளத்திற்குப் போய் விட்டது. 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையைப் பெற முடியவில்லை; கொரோனா பேரிடருக்காகக் கேட்ட எந்த நிதியுதவியையும் மத்திய அரசிடமிருந்து பெற இயலவில்லை; கண்துடைப்பு நாடகமாகக் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி முதலீடுகள் வரவில்லை; நிதி நிலைமையில் மூச்சுத் திணறி, தமிழக நிதி நிர்வாகம் இன்றைக்குத் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறைத்து இப்படியொரு அபாண்டப் பொய்யை அள்ளி வீசியிருக்கிறார்.
அசாத்திய துணிச்சல்
கொரோனா பேரிடர் ஊழலில் அமைச்சர்களும், கொரோனா டெண்டர்களின் மூலம் அ.தி.மு.க.,வினரும் வருமானத்தை உயர்த்திக் கொண்டதை, ஏதோ தமிழக மக்களின் தனிநபர் வருவாய் உயர்ந்துவிட்டது போல் 'நா கூசாமல்' பொய் சொல்லியிருக்கிறார் முதலமைச்சர். "பல்வேறு தினங்களில் நடத்திய ஆய்வுக்கூட்டங்களால் நோய்த் தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது" என்று, அடுத்த 'இமாலயப் பொய்யை', 4 லட்சத்து 22 ஆயிரத்து 85 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாளில், சொல்வதற்கு உண்மையிலேயே முதலமைச்சருக்கு அசாத்தியத் (!) துணிச்சல் இருக்க வேண்டும்.
அதிகரிப்பு
முதலமைச்சர் ஆய்வுக்குச் சென்ற மாவட்டங்களில் எல்லாம் கொரோனா நோயும், இறப்பும் அதிகரித்துள்ளதே தவிர, குறையவில்லை என்பது கண்கூடான உண்மை. அரசு அறிவிக்கும் கணக்குகள் படியே இந்த லட்சணம் என்றால், மறைக்கப்பட்டுள்ள கணக்கும் வெளியில் வந்தால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மற்றும் இறந்தோர் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்திற்கே வந்தாலும் வியப்பில்லை.
கைவிரிப்பு
அவரிடமே கணக்கு முறையாக இல்லை என்பதை அவரது 30.8.2020 அன்றைய அறிக்கையின் இறுதி பத்திகள் மிக அழகாக எடுத்துரைத்து விட்டது. "மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே இந்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்" என்று தமிழக மக்களிடம் சரணாகதியாகி, "நான் தோற்று விட்டேன். இனி உங்கள் பாதுகாப்பை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கைவிரித்து நிற்கிறார் முதலமைச்சர் திரு. பழனிசாமி.
அதிமுக அரசு
கொரோனா நோய்த் தொற்றை எப்படிக் கையாளக்கூடாது என்பதற்கு இந்திய அளவில் மட்டுமல்ல; உலக அளவிலேயே ஒரு அரசுக்கு 'முதல் பரிசு' வழங்க வேண்டும் என்றால், அது தமிழகத்தை தற்போது கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசுக்குத்தான்; முதலமைச்சர் திரு. பழனிசாமி அரசுக்குத்தான் கிடைக்கும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்!
அரசுக்கு வலியுறுத்தல்
ஆகவே மக்களை, 'கொரோனா பேரிடரை'க் காட்டி ஏமாற்றியது போதும்; பொருளாதாரத்தைச் சீரழித்தது போதும்; குறைந்தபட்சம், இப்போது செய்யப்பட்டுள்ள தளர்வுகளிலாவது, தனிநபர் வருமானத்தை இழந்து - வேலையை இழந்து - தொழிலை இழந்து தவிக்கும் தமிழக மக்களுக்கு ஆக்கபூர்வமான முறையில் உதவிட, உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.