நானும் விவசாயி என்று பச்சைத் துண்டு போட்டு நடிக்கிறார் முதலமைச்சர்... மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்..!
சென்னை: நானும் விவசாயி, நானும் விவசாயி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொள்கிறாரே தவிர; விவசாயியாக நடந்து கொள்ளவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் சென்னையில் இருந்தவாறு காணொலிக் காட்சி மூலம் கலந்துகொண்டு பேசிய போது அவர் இதனைக் கூறினார்.
அந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது;
புதிய விவசாய மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்... நினைத்ததை சாதித்த மத்திய அரசு..!
ஸ்டாலின் விமர்சனம்
''மக்களுக்கு உதவிகள் செய்வதற்குக் கூட அனுமதி தராத இரக்கமற்ற அரசாங்கமாக அ.தி.மு.க. அரசு இருக்கிறது. கொரோனா கால ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காய்கறிகள், மளிகைப் பொருட்கள் வழங்குவதற்குக் கூட இந்த அரசு அனுமதி வழங்கவில்லை. அதற்கும் நீதிமன்றத்துக்குப் போய்த்தான் அனுமதி வாங்கினோம்.''
பெரும் எதிர்ப்பு
''மத்திய அரசு கொண்டு வரும் விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் - மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோத சட்டத்துக்குத் தலையாட்டிய எடப்பாடி அரசைக் கண்டித்தும் நாளைய தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நாங்கள் மட்டுமல்ல; பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளம் இந்தச் சட்டங்களை எதிர்த்துள்ளது. மத்திய அமைச்சரவையில் இருந்து ஒரு அமைச்சரே விலகி உள்ளார். இதை விட மிகப்பெரிய எதிர்ப்பு வேறு எதுவும் இருக்க முடியாது.''
முதல்வர் நடிக்கிறார்
''ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறார். தான் ஆதரிக்கிறது மட்டுமில்லாமல்; மற்றவர்களையும் ஆதரிக்கச் சொல்கிறார். "நானும் விவசாயி, நானும் விவசாயிதான்" என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொள்கிறாரே தவிர; விவசாயியாக நடந்துகொள்ளவில்லை! விவசாயிகள் விரோதச் சட்டத்துக்கு ஆதரவாக அறிக்கை விட்டிருக்கிறார். இதைவிட விவசாயிகளுக்கு வேறு துரோகம் இருக்க முடியுமா? பச்சைத் துண்டு போட்டு நடித்தவரின் பச்சைத் துரோகம் இது!''
தலையாட்டிப் பொம்மை
''இந்தத் துரோகச் சட்டத்தை ஆதரித்ததால் தான், பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமியைப் பாராட்டுகிறார். கொரோனாவை முதலமைச்சர் பழனிசாமி கட்டுப்படுத்திவிட்டார் என்று சொல்லி இருக்கிறார். மாநில உரிமைகளுக்காக போராடாத தலையாட்டிப் பொம்மையாக பழனிசாமி இருப்பதால் தான் பிரதமர் மோடி அவரைப் பாராட்டுகிறார்.''
ஊரடங்கு திறப்புவிழா
''ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று ஐந்து மாதங்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். எடப்பாடி அரசு அதைச் செய்யவே இல்லை. ஊரடங்கு இருந்தால் தானே இழப்பீடு கேட்பீர்கள், இதோ ஊரடங்கையே தளர்த்திவிட்டோம் என்று சொல்லி அனைத்துக்கும் திறப்புவிழா நடத்திவிட்டார்கள்.அனைத்தையும் திறந்து வைத்துவிட்டு, அதை ஊரடங்கு காலம் என்று சொல்வதை மாதிரிக் கேலிக்கூத்து வேறு எதுவும் இருக்க முடியாது.''