புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு: களத்துமேடு மரத்தடியில் மு.க. ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்!
சென்னை: மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக புதிய வியூகமாக காஞ்சிபுரம் அருகே கிராமம் ஒன்றின் களத்துமேடு மரத்தடியில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடந்தது.
புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக் கட்சிகள் இன்று போராட்டம் நடத்தின. தமிழகத்தில் மொத்தம் 3,700 இடங்களில் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
காஞ்சிபுரம் அருகே கீழம்பி கிராமத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார். பொதுவாக போராட்டங்கள் அனைத்தும் பெருநகரங்கள் தொடங்கி பேரூர் வரைதான் நடைபெறுவது வழக்கம். இன்றும் திமுக கூட்டணிக் கட்சிகள் இதேபோல்தான் போராட்டம் நடத்தின.
ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் வழக்கத்துக்கு மாறாக, காஞ்சிபுரம் அருகே கீழம்பி என்ற கிராமத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். கீழம்பி கிராமத்தில் வயல்வெளிகள் சூழ களத்துமேடு அருகே இருந்த மரத்து அடியில் திறந்த வெளி மேடை போடப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வெயிலில் நிற்க வேண்டியது வரும் என்பதால் பச்சை நிற விரிப்பும் போடப்ப்பட்டிருந்தது. நமக்கு நாமே பயணத்தின் போது களத்து மேடுகளில் திண்ணைகளில் அமர்ந்து ஸ்டாலின் பொதுமக்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். இம்முறை புதிய வியூகமாக களத்துமேட்டு மரத்தடியையே மேடையாக்கி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார் ஸ்டாலின். அவரது இந்த வியூகம் பொதுமக்களை பெரிதும் ஈர்த்துள்ளது.
காஞ்சிபுரத்தில் வேட்டிய மடிச்சு கட்டி வயலில் இறங்கிய மு.க. ஸ்டாலின்!!