நிழல் ஒருபோதும் நிஜமாகாது... ஆன்லைன் வகுப்புகளும் வகுப்பறை வகுப்புகளும் ஒன்றாகாது -மு.க.ஸ்டாலின்
சென்னை: இணையவழிக் கல்வி முறை, நிச்சயமாக வகுப்பறைக் கல்விக்கு மாற்று இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நிழல் நிஜமாகிவிடாது என்றும், மாணவர்களிடையே பாகுபாட்டை உண்டாக்கி மாணவர் சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பாழடித்துவிடக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
பதில் சொல்வதில் இருந்து தப்ப முடியாது... ராஜேந்திரபாலாஜி மீது திமுக முன்னாள் அமைச்சர்கள் சாடல்
ஆன்லைன் வகுப்புகள்
"இணையவழி வகுப்புகள் நடத்துவதற்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை" என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ள அ.தி.மு.க. அரசு, திரைமறைவில் அந்த வகுப்புகளைத் தாராளமாக அனுமதிக்கும் உள்நோக்கத்துடன் ஒரு குழுவை நியமித்து- அதில் ஆசிரியர்களையும், பெற்றோர்களையும், மாணவர் பிரதிநிதிகளையும் புறக்கணித்திருக்கிறது.
கண்டனம்
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தைக் கிள்ளுக் கீரையாக எண்ணி, மனம் போன போக்கில் விளையாடும் அ.தி.மு.க. அரசின் இந்தச் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது.தமிழ்நாட்டில் உள்ள 1.31 கோடி மாணவர்களில், 60 சதவீதம் பேர் கிராமப்பகுதிகளில் இருக்கிறார்கள். இணையவழிக் கல்விக்குத் தேவையான கணினி, மடிக்கணினி, "ஸ்மார்ட் போன்" போன்றவை கிராமப்புற மாணவர்களிடம் இல்லை. இணையதள வசதிகள், "வை-ஃபை" மற்றும் "பிராட்பேண்ட்" வசதிகளும் அனைத்துப் பகுதிகளிலும் இல்லை.
பேராபத்து
குறிப்பாகக் கிராமங்களில் இந்த வசதிகள் கிடைப்பதே மிகவும் அரிது. அடிப்படை உட்கட்டமைப்பே இல்லாத நேரத்தில், இணையவழிக் கல்வி ஆபத்தானது. கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கும் - நகர்ப்புறங்களில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கும் பேராபத்தானது! கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழ்நாட்டில்20 லட்சம் மாணவர்களுக்கு, "கையடக்க மடிக்கணினி" (TAB) வழங்கப்படும் என்று அறிவித்தார். இதுவரை அதுவும் நடைபெறவில்லை.
விஷப்பரீட்சை
அரசின் சார்பில் துவங்கப்பட்டுள்ள "கல்வித் தொலைக்காட்சி" இணைப்பு இதுவரை ஒரு லட்சம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்தத் தொலைக்காட்சி அனைத்து இல்லங்களிலும் தெரியுமா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆகவே இணையவழி வகுப்புகளை நடத்துவதற்கு அடிப்படைக் கட்டமைப்பு அரசிடமும் இல்லை - மாணவர்களுக்கும் அத்தகைய வசதிகள் வழங்கப்படாத நிலையில், இதுபோன்ற ஒரு விஷப்பரீட்சையை ஏன் அரசு நடத்த விரும்புகிறது?
மன அழுத்தம்
அனைத்துப் பகுதிகளிலும் "டிஜிட்டல் முன்னேற்றம்" இல்லாத சூழலில், ஆசிரியர் இல்லாமல் பாடம் எடுக்க முடியாது. மாணவர் கேள்வி கேட்காமலோ அல்லது ஆசிரியருடன் நேரடியாகக் கலந்துரையாடல் செய்யாமலோ கற்றுக்கொள்ள முடியாது. கல்வியின் தரம் ஒருபுறமிருக்க, இணையவழிக் கல்வி மாணவர்களுக்குத் தேவையில்லாத மன அழுத்தத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும்.
ஏற்றத்தாழ்வு
நீண்ட நேரம் அலைபேசித் திரை அல்லது மடிக்கணினித் திரையைப் பார்ப்பதால், அவர்களின் கண் பார்வையில் குறைபாடுகள் நேரலாம். ஊரடங்கால் வேலையை இழந்து - வருமானத்தை இழந்து - வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்து, வாட்டத்தில் இருக்கும் பெற்றோருக்கு, தாங்க முடியாத நிதிச்சுமையாக இணையவழிக் கல்வி நெருக்கடியைத் தரும். மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வையும் பாகுபாடுகளையும் உருவாக்கி- மாணவர் சமுதாயத்திடையே பள்ளிகளில் நிலவிவரும் சமநிலையைச் சரித்துச் சாய்க்கும் இந்த இணையவழிக் கல்வி.
அனுமதி கூடாது
"சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்"; ஆகவே இணையவழி உட்கட்டமைப்பு முழுமையாக இல்லாத தமிழ்நாட்டில், ‘நேரடியாகக் கற்றல் - கற்பித்தல்' என்ற வகுப்பறைச் சூழல் மட்டுமே கல்வி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். "இணையவழிக் கல்வி முறை, நிச்சயமாக வகுப்பறைக் கல்விக்கு மாற்று இல்லை; நிழல் நிஜமாகிவிடாது" என்பதை அ.தி.மு.க. அரசு உணர்ந்து - அப்படியொரு வகுப்புகள் நடத்த அனுமதியளிக்கக் கூடாது.