உத்தவ்தாக்கரே அழைப்பை ஏற்று மும்பை செல்கிறார் மு.க.ஸ்டாலின்... நாளை பதவியேற்பு விழா
சென்னை: மஹாராஷ்டிரா மாநில முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே பதவியேற்கும் நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார் .
கடந்த ஒரு மாதமாக மஹாராஷ்டிராவில் நிலவி வந்த அரசியல் குழப்பம் தீர்ந்து நாளை சிவசேனா புதிய ஆட்சியை அமைக்கவுள்ளது.
உத்தவ் முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் முதல்வர்கள் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
உத்தவ் அழைப்பு
பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் நாளை காலை மும்பை செல்லவுள்ளார் ஸ்டாலின். அவருடன் பொன்முடி, கனிமொழி உள்ளிட்டோரும் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே அலைபேசி மூலம் இன்று அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மாநில கட்சி
இதனிடையே, உத்தவ் தாக்கரேவையும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரையும் இன்று அலைபேசி மூலம் தொடர்பு பேசிய மு.க.ஸ்டாலின், மஹாராஷ்டிராவில் புதிய அரசை அமைப்பதற்கு தமது வாழ்த்தை தெரிவித்துக்கொண்டார். மேலும், மாநில கட்சி தலைவர் ஒருவர் முதலமைச்சர் ஆவதற்கு பெருமைப்படுவதாக கூறினார்.
இரு மாநில உறவு
மேலும், எதிர்பட்ட தடைகளை எல்லாம் உடைத்து உத்தவ் வெற்றி பெற்றதாகவும், தமிழ்நாடு மஹாராஷ்டிரா இடையேயான உறவை உத்தவ் வலுப்படுத்துவார் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாக ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடிருந்தார்.
முக்கியத்துவம்
மு.க.ஸ்டாலின் மும்பை செல்வதன் மூலம் தேசிய அரசியலில் தனக்கு இருக்கும் முக்கியத்துவத்தை அவர் தக்கவைத்துக் கொள்வார் எனத் தெரிகிறது. இதனிடையே பீஹார், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நிதிஷ்குமார், ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் முதலமைச்சராக பதவியேற்ற போது ஸ்டாலின் அதில் பங்கேற்றது குறிப்பிடத்தகது.