பெரியாரின் 45வது நினைவு தினம் அனுசரிப்பு... சென்னையில் பெரியார் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை
சென்னை : பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் 45-வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது உருவப்படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, சென்னை சிம்சன் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு கீழ் இருக்கும் அவரது திரு உருவப்படத்திற்கு ஸ்டாலின், மலர் தூவி மரியாதை செலுத்தினார். பெரியாரின் 45-வது நினைவு தினத்தையொட்டி கி.வீரமணி தலைமையில் திராவிடர் கழகத்தினரும் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்சியில் கருஞ்சட்டை பேரணி மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.