திமுக பயந்து ஒதுங்கவில்லை; ஊடகங்கள் திரித்துச் சொல்கின்றன-மு.க.ஸ்டாலின்
Recommended Video
சென்னை: இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இருந்து திமுக பயந்து ஒதுங்கவில்லை என்றும், போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருகிறது எனவும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மறைந்த திமுக நிர்வாகி ஆயிரம் விளக்கு உசேன் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நேற்றிரவு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், இந்தி எதிர்ப்பு போராட்டம் ரத்து செய்யப்படவில்லை என்றும், நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள் ஒத்தி தான் வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
அழைப்பும்;விளக்கமும்
புதன்கிழமை காலை ஆளுநர் மளிகையில் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், ஆளுநர் தன்னை சந்திக்க விரும்புகிறார் என ராஜ்பவனில் இருந்து அதிகாரிகள் கேட்டுக்கொண்டதால் டி.ஆர்.பாலுவை அழைத்துக்கொண்டு ஆளுநரை சந்திக்க சென்றதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், அங்கு திமுகவின் போராட்டத்தை பற்றி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னிடம் விளக்கமாக கேட்டதாகவும், அமித்ஷாவின் கருத்து தவறாக செய்தி வந்துள்ளது, இந்தியை திணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் பேசவில்லை என்றும் எடுத்துக்கூறியதாக தெரிவித்தார்.
தற்காலிக ஒத்திவைப்பு
மேலும், நான் மத்திய அரசின் பிரதிநிதி என்னை நம்புங்கள் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னிடம் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டதாக கூறினார். ஆளுநர் மாளிகையில் இருந்து அண்ணா அறிவாலயத்துக்கு காரில் சென்று கொண்டிருக்கும்போதே, அமித்ஷா தனது கருத்து பற்றி விளக்கம் அளித்தார், இதையடுத்தே கலந்துபேசி போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைத்தோம் எனத் தெரிவித்தார் ஸ்டாலின்.
ஒதுங்கவில்லை
திமுக சரணடைந்துவிட்டதாகவும், பயந்து ஒதுங்கிக்கொண்டதாகவும் இன்று சில ஊடகங்கள் திட்டமிட்டு திரித்துக்கூறி வருகின்றன என்றும், திமுகவை பொறுத்தவரை பனங்காட்டு நரி அது எந்த சலசலப்புக்கும் அஞ்சாது எனவும் பேசினார் ஸ்டாலின். முன்னதாக ஆயிரம் விளக்கு உசேன் கட்சிக்காக ஆற்றிய பணிகள் குறித்து நினைவுகூர்ந்தார்.