அதிமுக அரசை இனியும் நம்ப வேண்டாம்... 'கோமா' நிலையை அடைந்துவிட்டது -மு.க.ஸ்டாலின்
சென்னை: கொரோனாவிலிருந்து அரசு பாதுகாக்கும் என இனியும் மக்கள் நம்ப வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முறையாக செயல்படாத அதிமுக அரசு கோமா நிலையை அடைந்துவிட்டதாக அவர் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
ஏனோதானோ பேச்சு
கொரோனா நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை மாநில அளவில் 3 லட்சத்திற்கும் அதிகமாகவும், சென்னையில் 1 லட்சத்தையும் தாண்டியிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. "3 நாளில் போய் விடும்" "10 நாளில் குறைந்து விடும்" "இது பணக்காரர்கள் வியாதி" என்றெல்லாம் ஏனோதானோ என்று பொறுப்பற்ற முறையில் பேசினார் முதலமைச்சர் திரு. பழனிசாமி!
மக்கள் பதற்றம்
திறமையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை, திட்டமிட்டு முறையாக எடுக்க முடியாமல், வெற்று நம்பிக்கையை ஊட்டி, மக்களை நட்டாற்றில் தவிக்க விட்ட அவர் தலைமையிலான அ.தி.மு.க. அரசின் நிர்வாகத் தோல்வி இன்றைக்கு இந்திய அளவில் கொரோனா நோய்த் தொற்றில் இரண்டாவது பெரிய மாநிலமாக உருவெடுத்து தமிழ்நாட்டிற்கு அவப்பெயரையும், தமிழக மக்களுக்கு பெரும் பதற்றத்தையும் தேடித் தந்து விட்டது.
ஊழல் தலைவிரித்தாடும்
மக்கள் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்குச் செல்ல முடியாமல் "இ-பாஸ்" முறையில் தடுத்து வருகிறது அ.தி.மு.க. அரசு. ஊழல் தலைவிரித்தாடும் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யாமல், ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும், வீட்டிற்குள்ளேயே மக்கள் - குறிப்பாக வாழ்வாதாரத்தைத் தேடும் ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், கட்டிப் போட்டிருப்பதைப் போல, முடக்கப்பட்டுள்ளார்கள்.
எது வரினும் வரட்டும்
இறப்புகளின்போது தங்களின் உற்றார் உறவினர் முகத்தைக் கூட பார்க்க முடியாத சோகத்தில் மிதக்கிறார்கள். இனியும் அரசை நம்பிப் பலனில்லை - "நமக்கு நாமே பாதுகாப்பு" என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்கள் - எது வரினும் வரட்டும் என்று சுய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப தற்போது முயற்சி செய்கிறார்கள்.
தகுதியில்லாதவர்கள்
கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தான் ஒரே தீர்வு என்று அ.தி.மு.க. அரசு சொன்னது. ஆனால் மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்குக் காலம் ஆகஸ்ட் மாதத்தை நெருங்கியபிறகும் கொரோனா பாதிப்பு குறையவில்லை; கூடிக்கொண்டு தான் போகிறது. அப்படியானால் இவர்களுக்கு ஊரடங்குச் சட்டங்களைக் கூட ஒழுங்காக அமல்படுத்தத் தெரியவில்லை; அதற்குக் கூடத் தகுதி இல்லாதவர்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.
எப்போது முற்றுப்புள்ளி?
கண்துடைப்பு நாடகத்தின் மூலமாக இலட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இழந்ததுதான் அவர்கள் கண்ட பலன். இவ்வளவுக்குப் பிறகும் கொரோனா பரவல் தடுக்கப்படவில்லை. இந்த ஊரடங்கைக் கண்துடைப்பு நாடகமாகவே மக்களில் பெரும்பாலானவர்கள் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்தக் கண்துடைப்பு நாடகத்துக்கு முற்றுப்புள்ளி எப்போது என்று மக்கள் கேட்கிறார்கள்.
ஸ்டாலின் கோரிக்கை
மதிப்பிற்குரிய தமிழக மக்களே! அனைத்திலும் தோல்வியடைந்து விட்ட அ.தி.மு.க. அரசை இனியும் சிறிதுகூட நம்பியிருக்காமல் - கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள "சுய பாதுகாப்பு" நடவடிக்கைகளில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று மிகுந்த அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்! அது ஒன்றுதான் உயிர்ப் பாதுகாப்புக்கான ஒரே வழி என்று தோன்றுகிறது.