சிறுபான்மையினர், ஈழத்தமிழர் உரிமையில் அதிமுக இரட்டை வேடம் - மு.க.ஸ்டாலின்
Recommended Video
சென்னை: சிறுபான்மையினர் நலன் மற்றும் ஈழத்தமிழர் உரிமைகளில் அதிமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், இந்திய அரசியல் சாசனத்தையே கேள்விக்குறியாக்கி இருட்டடிப்புச் செய்திடும் விதத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது;
குகை விட்டு கிளம்பிய புலி
மாநிலத்தின் பல பகுதிகளிலும் இளைஞரணியினர், குகை விட்டுக் கிளம்பும் புலியெனக் களமிறங்கி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஆவேசக் குரல் எழுப்பியுள்ளனர். இந்நிலையில், தலைமைக் கழகம் அறிவித்துள்ள போராட்டம் டிசம்பர் 17 - செவ்வாய்க்கிழமை அன்று தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கிறது.
திசைதிருப்ப
நாட்டின் வளர்ச்சியை அதலபாதாளத்திற்குத் தள்ளுகின்ற கடுமையான பொருளாதாரப் பின்னடைவு, வேலையின்மை, அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலையேற்றம் போன்ற பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளினால், மக்களிடையே வளர்ந்து வரும் ஏமாற்றத்தையும் கோபத்தையும் திட்டமிட்டுத் திசை திருப்புவதற்காகவே, பாரபட்சமான - ஓரவஞ்சனை கொண்ட இந்தச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
வெறுத்து புறக்கணிப்பு
இந்தியாவுக்குள் யாரெல்லாம் வரலாம்; வந்தால் யாருக்கெல்லாம் குடியுரிமை வழங்கப்படும் என்பதை இந்தச் சட்டம் வரையறுக்கிறது.
இந்துக்களை, கிறிஸ்தவர்களை, சீக்கியர்களை, புத்த மதத்தினரை வரவேற்கும் போது, இசுலாமிய சிறுபான்மையினரை எதற்காக வெறுத்துப் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் தி.மு.கழகம் உள்ளிட்ட மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் எழுப்புகின்ற கேள்வி.
முக்கியக் கேள்வி
அதுமட்டுமல்ல, அண்டை நாடுகளான இந்த மூன்று நாடுகளிலிருந்தும் இந்துக்கள் உள்ளிட்டோர் வரலாம் என்கிறபோது, இந்தியாவின் தென்முனையில் கண்ணீர்த்துளி போலக் காட்சியளிக்கும் அண்டை நாடான இலங்கையைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு வாய்ப்பளிக்காமல், தடை விதித்தது ஏன் என்பது கழகம் எழுப்புகின்ற மிக முக்கியமான கேள்வி.
அதிமுக உறுப்பினர்கள்
அ.தி.மு.க.,வின் மாநிலங்களவை உறுப்பினர்களான 11 பேரும் எதிர்த்து வாக்களித்திருந்தால், இந்தியாவை மதரீதியாகப் பிளவுபடுத்த நினைக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் கொடுங்கோன்மைச் சட்டத்தைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால், சிறுபான்மையினர் நலனிலோ, ஈழத்தமிழர் உரிமையிலோ எப்போதுமே உண்மையான அக்கறையின்றி இரட்டை வேடம் போடுகின்ற அ.தி.மு.க., தனது டெல்லி எஜமானர்களின் பாதம் பணிந்து செயல்பட்டதால் ஒரு விபரீதச் சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது.
துரோகம் இழைப்பு
தங்கள் கையிலிருந்த வலிமையான துருப்புச்சீட்டின் தன்மை அறியாத அ.தி.மு.க., ஆதரவு வாக்களித்து, சிறுபான்மையினருக்கும் ஈழத்தமிழர்களுக்கும் மாபெரும் துரோகம் இழைத்திருப்பதை, வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.
ஜெயலலிதா அரசு
உரிய ஆவணங்கள் இல்லாவிட்டாலும், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஈழத்தமிழ்க் குழந்தைகள் சேரலாம்" என்று, இலவசக் கல்வி தந்தவர் கலைஞர் அவர்கள். உயர்கல்வியில் இடஒதுக்கீடு தந்ததும் தலைவர் கலைஞர் ஆட்சிதான். அதற்கு நேர்மாறாக "ஈழ அகதிகள் 12-ஆம் வகுப்புக்கு மேல் படிக்க அனுமதி இல்லை" என்று ஆணை பிறப்பித்த ஆட்சி, ஜெயலலிதாவின் ஆட்சி.
அணி திரள்வோம்
ஈழத்தமிழர்களின் நலன் காக்கவும், சிறுபான்மையினரான முஸ்லிம் சமுதாயத்தினரின் உரிமைகளைக் காக்கவும், மதரீதியாக நாட்டைக் கூறுபோடும் மத்திய பா.ஜ.க. அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டிசம்பர் 17 (நாளை) அன்று கழகம், போராட்டக் களம் காண்கிறது. நாடு காத்திடத் திரளுவோம்!