கும்பி எரியுது, குடல் கருகுது, குளு குளு ஊட்டி ஒரு கேடா... நல்லாட்சி விருது பற்றி ஸ்டாலின்
சென்னை: தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது வழங்கப்பட்டிருப்பது கும்பி எரியுது, குடல் கருகுது, குளு குளு ஊட்டி ஒரு கேடா என்பதைத்தான் நினைவுபடுத்துவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கூட்டணிக்கும் அப்பாற்பட்ட நெருக்கமான உறவாக அதிமுக,பாஜக உறவு இருப்பதை இந்த நிகழ்வு காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
யார் ஒப்புதல்?
மத்திய அரசின் இந்தத் தரவரிசைப் பட்டியல் ஏன் திடீரென்று வெளியிடப்பட்டுள்ளது? இந்தத் தர வரிசைப் பட்டியலுக்கு மத்திய அரசில் யார் ஒப்புதல் கொடுத்தது? பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையா? துறைகளின் கீழ் உள்ள அளவுகோல் குறித்த விவரங்களை அளித்தது யார் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாத, ஒரு "மர்ம ஆய்வறிக்கை" அம்பலத்திற்கு வந்திருக்கிறது.
விவரம் இல்லை
அதிமுக அரசுக்கு "நல்லாட்சி சாயம் பூசி" கூட்டணி தர்மத்தை நிலை நாட்டியிருக்கிறதோ மத்திய பா.ஜ.க. அரசு என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு, குறிப்பாக நடுநிலையாளர்களுக்கு எழுகிறது. ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட 9 துறைகளில் இரு துறைகளில் மட்டுமே "முதலிடத்தில் இருப்பதாக" உள்ள தர வரிசைப் பட்டியலில் எப்படி தமிழகம் முதலிடத்திற்கு வந்துள்ளதாக ஆய்வு கூறுகிறது? எந்தவித விளக்கமோ, விவரமோ இல்லை.
சரமாரி கேள்வி
"நீதி நிர்வாகம் மற்றும் பொதுப் பாதுகாப்பில்" முதலிடம் என்று மத்திய அரசு கண்டுபிடித்திருக்கிறது. "பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை" "ஸ்டெர்லைட் போராட்டத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட கொடுமை", "பெண் குழந்தைகள் பாலின வன்கொடுமையில் தமிழகம் இந்தியாவில் 2-ஆவது இடம்" என்று அடுக்கடுக்கான சட்டம்- ஒழுங்கு சீரழிவில் அவதிப்படும் மக்களுக்கு அதிமுக நல்லாட்சி வழங்கியுள்ளது என்று எப்படி மத்திய அரசு கண்டுபிடித்தது?
பாரபட்சமற்ற
பாரபட்சமற்ற ஆய்வு ஒன்று, அரசியல் சாராத நடுநிலை அமைப்பினால், நிபுணர்களைக் கொண்டு, இன்றைக்கு நடத்தப்பட்டால்- முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி ஆட்சியில் தமிழகம் "கமிஷன், கரெப்ஷன், கலெக்ஷனில்" முதலிடம் பிடிக்கும். சட்டம் ஒழுங்கு சீரழிவில் முதல் இடத்தைப் பிடிக்கும்.
சீரழியட்டும்
தங்களுக்குப் பயன்படாத தமிழகம் எப்படியோ சீரழியட்டும், அந்த மக்கள் எக்கேடோ கெட்டுப் போகட்டும் என்ற வஞ்சக நோக்கில், "அதிமுக அரசுக்கு நல்லாட்சி" சான்றிதழை மத்திய பா.ஜ.க. அரசு செயற்கையாக அளித்திருக்கிறது. இதைத் தமிழக மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள்! தரவரிசைப் பின்னணியைப் பற்றி, தமிழக மக்களுக்கு எழுந்துள்ள அய்யப்பாடுகளைப் போக்கிட வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.