என்னிடம் இருந்து தப்ப முடியாது... இ.பி.எஸ்.க்கு ஸ்டாலின் மீண்டும் எச்சரிக்கை
சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம், ஆட்சியில் ஊழல் உள்ளிட்ட விவகாரங்களில் தன்னிடம் இருந்து யாரும் தப்ப முடியாது என்றும், யார் விட்டாலும் தாம் விடமாட்டேன் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் திமுக நிர்வாகி இல்ல விழாவில் பேசிய அவர், இன்னும் ஓராண்டில் தமிழகத்தில் திமுக ஆட்சி மலர்வது உறுதி என நம்பிக்கை தெரிவித்தார்.
லஞ்சம் வாங்குவதிலும், கமிஷன் பெறுவதிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மிஞ்சிவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.
கலவரம்
குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக அதிமுகவும், பாமகவும் வாக்களிக்காமல் இருந்திருந்தால் அந்த சட்டம் நிறைவேறி இருக்காது என்றும், அந்த இரண்டு கட்சிகளாலும் தான் நாட்டில் வன்முறை வெடித்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இஸ்லாமியர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் மட்டுமே பாதிப்பு என யாரும் எண்ண வேண்டாம் என்றும், இந்துக்களுக்கும் இந்த சட்டத்தால் பாதிப்பு ஏற்படும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் சந்தேகப்பட்டியலில் இடம்பெறும் அவலம் ஏற்படக்கூடும் என அவர் அச்சம் தெரிவித்தார்.
நான் விடமாட்டேன்
ஜெயலலிதா மர்ம மரணம், ஆட்சியில் ஊழல் உள்ளிட்ட விவகாரங்களில் தன்னிடம் இருந்து யாரும் தப்ப முடியாது என்றும், யார் விட்டாலும் தாம் விடப்போவதில்லை எனவும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.க்கு ஸ்டாலின் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே இந்த எச்சரிக்கையை மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் விடுத்திருந்தார். ஊழலில் கொடிகட்டி பறக்கும் ஆட்சி தமிழகத்தில் நடப்பதாகவும், உள்ளாட்சித்துறையை கையில் வைத்துக்கொண்டு லஞ்சம் வாங்குவதில் எடப்பாடியையே வேலுமணி மிஞ்சிவிட்டதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
புகார்
அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, வேலுமணி ஆகியோர் மீது நீதிமன்றமே குட்டு வைத்து ஊழல் வழக்குகளை விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதால் தான் விசாரணை ஆணையத்திற்கு அவகாசம் தரப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை முடிந்துவிட்டால் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகிய இருவரும் வெளியில் இருக்க முடியாது, சிறையில் தான் இருக்க வேண்டும் என ஆவேசம் காட்டினார்.
நாம் தான்
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ளதாகவும், அடுத்த ஆட்சி உறுதியாக திமுக ஆட்சி எனவும் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். அப்போது, கொள்ளையடித்தவர்கள் யாரும் வெளியே நடமாட முடியாது என்றும் தன்னிடம் இருந்து தப்பவே முடியாது எனவும் தெரிவித்தார். அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதாகவும், அதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.